Nostalgic 6 - தோத்திர பாடல்கள்

என் பள்ளி நாட்களில் என்னை மிகவும் குழப்பிய சில விசயங்களில் ஒன்று நான் எந்த மதத்தை சேர்ந்தவன் என்பது. அந்த குழப்பத்திற்கு நிறைய காரணங்கள். முக்கியமான ஒன்று, என் அம்மா.

எனக்கு நினைவு தெரிந்து மிக மகிழ்ச்சியான நாட்களில் ஒன்று கிறிஸ்துமஸ். அன்றைய தினத்திற்கு முன் தினம் நள்ளிரவு ஜெபத்திற்க்காய் மதுரை கீழ வாசல் CSI சர்ச்க்கு செல்வோம். என் அம்மா, பெரியம்மாக்கள், சித்திகள், என் அப்பம்மா, அவரது சகோதரிகள், அவர்களது மகன்கள் என ஓர் பெரிய family re union அங்கே அரங்கேறும். நாங்கள் எல்லோரும் சர்ச்சின் வெளியே விளையாடிக் கொண்டிருப்போம். நடு  இரவின் பின் எல்லோரும் கிளம்பி வீட்டிற்கு செல்வோம்.சமயத்தில் அப்போது கேக்கும் கிடைக்கும்.

எங்கள் எல்லோர் பெயரும் பைபிள் வார்த்தைகள் என்று எனது அப்பம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். என் அம்மாவை புரிந்து கொள்வதுதான் குழப்பங்களில் விட்டது. நடு இரவு ஜெபங்கள், முஸ்லிம் அம்மாவுடன் வீட்டில் ஜெபம் என எல்லாம் நடக்கும். வெள்ளி, செவ்வாய்களில் கந்தர் சஷ்டி கவசமும் வீட்டில் பாடும்.
என் அப்பாவின் அம்மா எனக்கு நினைவு தெரிந்து கிறிஸ்துவ மதத்தில் இருந்தார் அவரது அம்மா (சந்தோசம்மாள்) அதற்கு முன்பே கிறிஸ்தவ மதத்தில் இருந்தார். இன்னமும் எனது குடும்பத்தில் சரி பாதி கிறிஸ்துவர்கள். எல்லா வீட்டு  விழாக்களிலும் கிறிஸ்தவ தோத்திர பாடல்கள் பாடவேண்டும். என் பெரியம்மாவோ, அல்லது யாரவது பாடல் புஸ்தகங்களை தருவார். நாங்கள் பேரன், பேத்திகள் அனைவரும் பாடுவோம். என் அம்மா, சித்திகள், பெரியம்மா எல்லோரும் பாடுவார்கள்.


நான் எட்டாவது படிக்கும் போது என் அப்பம்மா இறந்தார்கள். அப்போது கல்லறையில் அவரை வைத்து விட்டு நாங்கள் எல்லோரும் சுற்றி நின்று பாடியது இப்பவும் நினைவில்.

ஆனால் யாரும் என்னிடம் இதுதான் பெரியது அல்லது இந்த மதத்திற்கு வந்து விடு என்று சொன்னதில்லை  (என் அம்மாவிடம் சொன்னதாக கேள்வி). அதனாலோ என்னவோ பள்ளி நாட்களிலேயே புதிய ஏற்பாடும் பழைய ஏற்பாடும் படித்து முடித்துவிட்டேன். இந்த குழப்பத்தில் எந்த பக்கமும் சாராது இருக்கவே பல நாட்கள் நாத்திக வேஷம் போட்டிருக்கிறேன்.

இதை புரிந்து கொண்டு மதம் இதில் முக்கியம் இல்லை மனிதர்கள் மட்டுமே முக்கியம் என்று நான் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் போது நாத்திகராய்  இருந்த என் அப்பா கோயில்களுக்கு செல்ல ஆரம்பித்து விட்டார். மாற்றங்கள் மட்டுமே வாழ்க்கையாய்  இருக்கிறது.

இந்த பாடல்கள் எல்லாம் என் அப்பம்மாவிற்கும், அவரது சகோதரிகளுக்கும், என் மீது அன்று படிக்க பணமின்றி இருந்த நாட்களிலும் பின்னர் கொஞ்சம் தலை நிமிர்ந்த போது என்று எல்லா நாட்களிலும் அன்பை மட்டுமே காட்டிய என் தாத்தாகளுக்கும், ஏன், எனக்கும் பிரியமான பாடல்கள்.

மனதை பிசைந்து, கண்ணில் நீர் வர மனக் கவலைகளை தீர்ப்பதற்கு மதம் என்பது வெறும் பெயரின்றி மற்றது எல்லாம் இசையும், பாடல்களும் மட்டுமே என்று புரிவதற்கு சில வருடங்கள் பிடித்தாலும் இன்றும் என்னால் பதில் சொல்ல முடியாத கேள்வி, இந்த குழப்பங்கள் இல்லாத வாழ்க்கை இருந்திருந்தால் நான் நானாக இருந்திருப்பேனா?

கடைசியாக, எனக்கு பிடித்த இன்னொரு பாடல். போன வாரம் சென்னை தாம்பரம் செல்லும் மின் வண்டியில் கொஞ்சம் காத்திரமான உடலுடன் ஒரு பார்வை இழந்தவர் இந்த பாடலை உணர்ச்சியுடன் பாடிய பொழுது எனது பள்ளி நாட்களும் நான் பாடிய தோத்திர பாடல்களும் நினைவுக்கு வந்தது. அந்த பாடல் சகோதரர் DGS தினகரனின் குரலில்.

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...