நவீன தமிழ் கவிஞர்கள் - தேன்மொழி தாஸ் / அ.வெண்ணிலா

தேன்மொழி தாஸ் 

கவிதை, சிறுகதை, சினிமா, தொலைக்காட்சி  என பல தளங்களில் இயங்கி வரும் தேன்மொழி தாசின் கவிதைகள் பெரும்பாலும் துயரங்கள் நிறைந்தவை.

"நீ என் நினைவோடு இருப்பாய் அல்லது வேறு யாரின் நினைவிலும் கூட
எனக்காக வாழ்ந்தான் இவன் - என
எந்த மனிதனையும் யாராலும் காட்ட இயலாது
நான் என் நாய்க் குட்டிகளின் கண்களுக்குள் வசிப்பதில் நிறைவுருகிறேன்"

என நிராசைகளின் முழுமையாய் தன்னை காட்டிக் கொள்கிறார்.

"தனிமையிடம் கையளிக்கப்பட்ட  இவ்விரவு 
நிலவின் பின் மெல்ல நகர்கிறது"

என்னும் இவர் கவிதைகள் தனிமை, அவமானம், இறப்பு என பெரும்பாலும் துயரங்களை பற்றியதாய் இருந்தாலும் இவரின் அடர்த்தியான காதல் கவிதைகள் வாசிக்க இனிமையானவை.

"எனது அணைப்பின் கதகதப்பை 
நிலவினாலும் தரயியலாது என 
உணரும் நாளில் நீ 
வானத்தை 
நம் காதல் கடிதமென மடிப்பாய்"

போன்ற கவிதைகள் காதலின் வீச்சை வெகு எளிதாய் கடக்கிறது.

பெரும்பாலான கவிதைகள்  அவரது கனவுகளின் நீட்சிகளாகவே இருக்கின்றன. அக்கனவுகளை கொஞ்சமும் பிறழாமல் வார்த்தைகளால் வசப்படுத்துகிறார். இந்த அனாயாச வார்த்தை பிரயோகம் தேன் மொழி தாஸின் கவிதை மொழியாய் வசீகரிக்கிறது. அவரது வாழ்வின் பல நிகழ்வுகளையும் , துயரங்களையும் பதிவு செய்து கொண்டே போகிறார். அவரது கவிதைகளில் வந்து போகும் சூசன், லதா, மெசியா, ஜெசி ,காயா, அவரது மரித்து போன நாய் என ஒவ்வொருவரும் நம் வாழ்விலும் ஒரு சிறு இடத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

"அநேகமாய் இவ்வுலகில் இறந்த முதல் பட்டாம்பூச்சி
நிராசைகளின் ஆதித் தாயாக இருக்கக் கூடும்
பசும்புல் பாத‌த்தில் உரசும் போது
ஒரு பியானோ இசைக்கலைஞனைப் போல‌
தனிமையின் துயர் பாடல் ஒன்றை
உணர்வின் மொட்டுகளில் வழியவிடுகிறது
ஒட்டுண்ணித் தாவரங்களின் வேர்கள்
காட்டின் பேரமைதியை காதலிக்கின்றன‌"
 

அ. வெண்ணிலா   

அ. வெண்ணிலாவின் கவிதைகள் சமூகம் சார்ந்தவை. பெண் பார்வையில் சமூகம் என்பதும் பொருந்தும். பெரும்பாலும் அவர் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறை, குடும்ப சூழலில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் உடல் மற்றும் மனரீதியான வன்முறைகள் என பலவற்றை பற்றியும் உரக்கவே குரல் கொடுத்து வருகிறார். 

அவர் கவிதைகளின் பாடுபொருளும் அவையே.  

"ஒவ்வொரு இரவுகள் முடிந்து
வீடு திரும்பும் வேளையில்
நான் இழந்தது
ஒன்றுமில்லையென
நிரூபிக்க வேண்டியிருப்பதும்
நிரூபணத்தை
நீ ஏற்றுக் கொள்வதும்
நம் வழக்கங்களாய் இருப்பதையே
'வாழ்தல்' என்கிறார்கள்."

ஒரு பெண்ணின் கோபக்குரலாய் இருப்பினும் , ஒரு உபதேச மொழி வராது கவித்துவமாக எழுத்துவதிலேயே அவரது கவி மொழி இருக்கிறது.

"சாப்பிடும் சோறு
பேசும் பேச்சு
சிரிக்கும் சிரிப்பு
எல்லாம் குழந்தைக்காக என
கரு சுமந்து...
நாளை
உன்னோட வண்டியில்
முன்நின்று சிரித்து வர
உன் இனிசியல் போட்டுக்கொள்ள
உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன் "

பெரும்பாலும் ஆண்களை நேரடியாக விளித்து தன அதிருப்தியை வெளிப்படுத்துபவைகளாகவே இக்கவிதைகள் அமைந்துள்ளன. இந்த சமூகத்தின் கட்டமைப்பில் பெண்கள் உரிமைகள் எப்படி பறிக்க படுகின்றன. தங்களை எப்போதும் நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டிய நிர்பந்தம் எப்படி திருமணம் போன்ற சடங்குகளால் திணிக்க படுகின்றது என்று பலவற்றையும் இவரது கவிதைகள் பேசி செல்கின்றன.

"களைத்துச் சலித்து
உள் நுழைகிறேன்.
ஆடை மாற்றுகையில்
கழன்று விழுகின்றன
உடல் முழுவதும் பதிந்திருந்த
பார்வைகள்
தீண்டல்கள்
தொடுதல்கள்
உரசல்கள்
உதறி எடுத்து
வேற்றாடை மாற்றித்
திரும்புகையில்
அத்தனையையும்
இரவு – தன்
கைகளில்
சேகரித்துக் கொண்டிருந்தது."

 போன்ற சலிப்புடன் வலி மிகுந்த வார்த்தைகளே அவரின் கவிதைகள்.

புத்தகங்கள் 

1. நீரில் அலையும் முகம் - அ. வெண்ணிலா 
5. நிராசைகளின் ஆதித்தாய் - தேன்மொழி தாஸ் 

நவீன தமிழ் கவிஞர்கள் - சக்தி ஜோதி

சக்தி ஜோதி - இன்றைய தமிழ் சூழலில் ஒரு தனித்துவமான கவிஞர்.

சக்தி ஜோதியின் கவிதைகள் பெண்ணின் மனதை, நூற்றாண்டுகளாக  அடக்கப்பட்ட வேட்கையை எழுத்தாய்  வடிப்பவை. சங்க கால பெண் கவிஞர்களின் வழியில் நுட்பமும், காதலுமான பெண் மனதை, பெரும்பாலும் தமிழில் எழுதுபடாத பெண் மனதின் ஆசைகளை, காதலை வெளிக்கொணருபவை .

என்னைச் சித்திரமாக     
வரைந்து கொண்டிருக்கும்
உனக்குத் தெரியாது
நான்
எத்தனை முறை
வரையப் பட்டுள்ளேன் என்பதும்
ஒவ்வொரு முறையும்
என் முகம்
எவ்வாறு மாறிப் போனது என்பதும்
நான்
யார் யாருக்கோ அடையாளமாக
இருக்கையில்
உன் நினைவில்
என்னிருப்பை உணர்கின்றேன்.
நீயும்
ஒரு சித்திரத்தை வரைந்து விடாதே.

என்ற கவிதையில் ஒவ்வொரு பெண்ணின் தனிமையின், புது உறவின் நிச்சயமின்மையை, தன்னிலை பெற்று இருக்க முடியாது , ஒவ்வொருவரின் ஓவியமாய் , வெறும் தாய், மனைவி, மகள் என்று , தன் சுயம் அழித்து வாழும் தமிழ் பெண்களின் இரைஞ்சல் அது.

பெண் மனதின் காமத்தை இத்துணை அழகாய் இதுவரை யாரும் எழுதவில்லை என்றே சொல்வேன். சக்திஜோதியின் முழு மொழி வன்மையும் அவரது இத்தகைய கவிதைகளிலேயே வெளிவருகிறது.

இன்றைய  இரவின் நிலவு
அத்தனை  குளிர்வாய்  இருக்கிறது
.....

அரும்புகிற  கவிதை வரிகளை
மலரச்செய்கிறது
எழுதப்படாத  சொற்களை
நிலவின் முன் வைத்துக் காத்திருக்கிறேன்

 நிலவு  தன்  ஒளிவரிகளால்
என் மீது
எழுதத்  தொடங்குகிறது
பின்னிரவில்
வெப்பம்  தணிந்த  உடலின்
கண்களில்
இரண்டு  நிலவு  மிதந்துகொண்டிருக்கிறது .

  
போன்ற வரிகளில் கலவியின் முடிவின் மனநிலையை படிமங்களால் நிரப்புகிறார். காமம் அழகாய் கலவி நடத்துகிறது.

ஆனால் சக்தி ஜோதியின் கவித்துவம் முழுமையாய் வெளிவருவது அவரின் காதல் கவிதைகளில் தான்.

சக்தி ஜோதியின் மனம் காதலின் மன எழுச்சிகளை கூர்மையாக உற்று நோக்கி அதை கவிதையாய் வடிக்கிறது. இத்துணை ரசனையுடன் காதல் கவிதைகளை வாசித்தது 'குறுந்தொகை' 'நற்றிணை'க்கு பிறகு இப்போதுதான்.


ஓடும் நதியில் தவறி விழும் ஒற்றையிலை
சலனப்படுத்துவதில்லை நீரின் போக்கினை
என்றறிந்திருந்த மனம்
விம்மிக் கசிகிறது
பழுத்த மஞ்சளும்
வெளிர் பச்சையும் கலந்து
மையம் அகன்று முனை குறுகிய அந்த இலை
நதியில் மிதந்து கொண்டிருக்க
அவன் கண்களை நினைவூட்டியபடியிருந்தது.
விருட்சமென வளரத் துவங்கியது
அவனது வேர்கள்

புலனிலகப்படாமல் கிளைத்துப் பரவின
நிலமெங்கும்
நதியின் போக்கில் செல்லும் அவ்விலை
கண்களிலிருந்து மறைய
நிசப்தமாகிறது காற்று.


சக்தி ஜோதியின் கவிதை உலகம் முற்றிலும் தன் மனதை சார்ந்தது. புற உலக நிகழ்வுகள் அதில் வெறும் காட்சியாய் மட்டுமே வருகின்றன. அவரது சமூக அக்கறை கவிதைகளை தாண்டி வருகிறது.

"ஒரு துளி கண்ணீர் வழியாக கடந்து செல்கிறது அன்பு" போன்ற வரிகள் காதலின் கையறு தன்மையை, ஆதங்கத்தை வெளி கொணர்கிறது.

அவரை சங்க தமிழ் பெண் புலவர்களின் தொடர்ச்சியாகவே பார்க்கலாம்.ஒரு பெண்மனதை எழுத்தில் இவ்வளவு அருகாமையில் தமிழில் யாரும் சமீபத்தில் எழுதவில்லை என்றே சொல்லலாம்.

என்னை பொறுத்த வரை, இன்றைய தமிழின் பெரிதும் அறிந்து கொள்ள படாத, ஆனால் பெரிதும் கொண்டாடப் படவேண்டிய மிக முக்கிய கவிஞர்களில் ஒருவர்.

 புத்தகங்கள்
1. உடல் மனம் மொழி
2. எனக்கான ஆகாயம்
3. கடலோடு இசைத்தல்
4. நிலம் புகும் சொற்கள் 
5.  காற்றில் மிதக்கும் நீலம்

நவீன தமிழ் கவிஞர்கள் - அனார்

நீண்ட இடைவெளிக்கு பிறகு, கடந்த ஒரு வருடமாக தமிழ் கவிதைகளை ஓரளவிற்கு தீவிரமாகவே வாசித்து வருகிறேன். இடையில் விட்ட பெரும் கால இடைவெளியினால் பல ஆண்டுகளாக இயங்கி வரும் கவிஞர்களின் அறிமுகம் இப்பொழுதே ஆகிறது. 

பெரும் பெயர் தாங்கிய பெருங்கவிஞர்களுக்கிடையே என்னை திரும்பவும் வாசிக்க - திரும்ப திருமப - வாசிக்க வைப்பவர்கள் இவர்கள். இந்த பட்டியல் முழுக்கவும் என்னுடைய சொந்த விருப்பத்தின் பட்டியலே. 

இதில் முன்னொரு காலத்தில் இருந்து இன்றும் என் இதயத்திற்கு அணுக்கமான கவிஞர்கள் - ஞான கூத்தன், கலாப்ரியா, கல்யாண்ஜி, மனுஷ்யபுத்திரன், பசுவய்யா, ஆனந்த், தேவ தேவன், சுகுமாரன், சல்மா  மற்றும் பலரை எடுத்துக் கொள்ளவில்லை. விடுபட்ட ஏனையோரை நான் வாசிக்காமலிருக்கவே வாய்ப்பு அதிகம். 

இந்த பட்டியல் எப்படி பெரும்பாலும் பெண் கவிஞர்களாகவே இருக்கிறது என்பதற்கு எனது ஒரு தலை கருத்தான - பெண்கள் மட்டுமே நம் மனதின் காவலர்களாக இருக்கிறார்கள் - என்பது மட்டுமே காரணம். மற்றும் நவீன தமிழ் கவிதை உலகில் படிமங்களிலும், வார்த்தை சிக்கனத்திலும் முன்னணியில் இருக்கிறார்கள். 

அனார் 
 
இலங்கையை சேர்ந்த அனார் கவிதைகள் முழுவதும் புதிய சிந்தனைகள் மொழியின் வளத்துடனும் ஈழ கவிதைகளுக்கு ஒரு புது வடிவம் தருவதாகவும் இருக்கிறது. 

"கண்களில் இருந்து காதலைப் பொழிய செய்பவள்"
என்று சொல்லும் அதே நேரத்தில் 
"மலைகளை கட்டி இழுத்து வரும் சூனியக்காரி "
என்றும் அறிமுகம் செய்து கொள் கிறார் .

வார்த்தைகளின் படிமங்களில் பெண்ணின் மனதை, காதலை, காயங்களை விவரித்து செல்லும் அனார், வார்த்தைகளினால் மனதின் கவனத்தை ஈர்க்கிறார்.
"நீ எனக்கெழுதிய கடிதங்களில்
 அந்நியமான காலடி ஓசைகளும்
 பயங்கரமான நடுக்கங்களுமிருந்தன"
 போன்ற ரசிக்கும் வரிகளுடன் 

"மாதுளையின் கனிந்த சிவப்பு
ஊறிவிழும் நம் சொற்களை
முத்துக்களின் வரிசையாக
மாதுளை அரணமனைக்குள்ளே அடுக்குகிறோம்." (மகுடி)

போன்று எதிர்பாராத படிமங்களின் ஊடே புனைவாய் கவிதை கட்டமைக்க படுகிறது.

அனாரின் கவிதைகள் பெண்களின் மனம், காதல், ஏமாற்றம், நினைவுகள் என பெண்களின் உலகத்தை சுற்றியே கட்டமைக்க படுகிறது.

அனாரின் கவிதை கொடுக்கும் வாசிப்பனுபவம் ஒரு சிறு குழந்தையுடன் விளையாடுவது போன்றது. சிறு புதிர்களுடன் , எதிர்பாராத வார்த்தை படிமங்கள் என அவரின் பெண் குரல் மிகவும் வசீகரமானது.

"நினைவுப் பந்தலின் கீழ்
காட்டு மல்லிகையின் வாசனை
ஸர்பத்தை வரவழைக்கிறது
மேனி மினுக்கத்தில்
தெளிவின் மென்மையில்
தாழம்பூ மண்டபம் விரிகிறது."
அனாரின் கவிதைகளும் அந்த காட்டு மல்லிகை போன்றவையே..

அவசியமான கவிதை புத்தகங்கள்

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...