அறியப்படாத கிறிஸ்துவமும், அய்யனார் கதையும் - 4

மணப்பாடு.

தூத்துக்குடியில் இருந்து 60 கி.மீ தூரத்தில் மணப்பாடு இருக்கிறது. இந்த முறை கூகுளாண்டவரின் துணை வேண்டாம் என்று நினைத்து, நாங்களே நேராக திருச்செந்தூர் ரோட்டிற்கு வந்துவிட்டோம். 

மணப்பாடு போர்த்துகீசியர்கள் தமிழக கடற்கரைகளில் முதலில் வந்திறங்கிய இடங்களில் ஒன்று. அதற்கு மேலும் புனித சவேரியார் இங்குதான் 1542ல் மணப்பாட்டிற்கு வந்து முத்துகுளித்துறை பகுதிகள் முழுவதிலும் ஊழியம் செய்திருக்கிறார். கோவா சென்றிருந்த போது அங்கிருக்கும் போம் ஜீசஸ் பேராலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் சவேரியாரின் உடலை பார்த்திருந்தோம். இந்த முறை அவர் ஊழியம் செய்த இடங்களை பார்க்க சென்றோம்.



மணப்பாடு சற்றே பெரிய கிராமம். ஆனால் இங்கிருக்கும் தேவாலயங்கள் மிகவும் அழகானவை. கிட்டத்தட்ட ரோமை கத்தோலிக்கர்கள் நிறைந்து இருக்கும் இந்த கிராமத்தில், இருக்கும் பெரிய தேவாலயங்கள் கட்டாயம் பார்க்க வேண்டியவை.

நாங்கள் கிட்டத்தட்ட வெயில் உச்சிக்கு வரும் நேரத்தில் பரிசுத்த ஆவியின் தேவாலயத்தை வந்தடைந்தோம். பார்த்தவுடன் நம்மை ஈர்ப்பது இந்த ஆலயங்களின் நிறம்தான். பரிசுத்த ஆவி தேவாலயம் இந்த மண்ணின் நிறத்தில் மிகவும் கம்பீரமாக எழுப்பப்பட்டிருக்கிறது. 

உள்ளே நுழைந்தவுடன் மாதாவின் சொரூபத்துடன் மிகப் பெரிய அழகான பீடம் நம்மை கவர்கிறது. அருகிலேயே புனிதர்களின் சொரூபங்களும், சவேரியாரின் வாழ்வில் இருந்து சில நிகழ்வுகளும், சிலைகளாகவும், அழகான ஓவியங்களாகவும் வைக்கப்பட்டிருக்கிறது. பெரும் ஆலயத்தின் ஒரு பகுதியில் பீடத்திற்கு அருகே திருப்பண்டங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஜெருசலேமில் இயேசுவை அறைந்த உண்மையான மரசிலுவையின் துண்டு ஒன்று, சவேரியாரின் விரல்களில் ஒன்று, இன்னமும் சில புனிதர்களின் துணிகளின் துண்டுகள் போன்ற பலவும் வைக்கப்பட்டிருக்கிறது. திருவிழாவின் போது இவற்றை ஊர்வலமாக எடுத்து செல்வார்களாம்.


ரோமை கத்தோலிக்கத்தின் நம்பிக்கைகள் பலவற்றையும் நாம் எப்படி வேண்டுமென்றாலும்  எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த முத்துகுளித்துறை மக்கள் இந்த நம்பிக்கைகளுக்கு பதிலாக கல்வியும், மருத்துவமும் பெற்றார்கள். இங்கும் பெரிய பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பார்க்க முடிகிறது. இங்கு தண்ணீர் வசதியை நூறு வருடங்களுக்கு முன்பே  செய்து கொடுத்து, அதை திருநெல்வேலி கலெக்டர் திறந்து வைத்ததாக ஒரு கல்வெட்டை கோயிலுக்கு வெளியே பார்த்தேன். 

அருகிலேயே புனித ஜேம்ஸ் பேராலயம் இருக்கிறது. அதற்கு செல்லும் வழியில் மீனவர்கள் சிலர் உரக்கப்பேசி சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். 

இன்னமும் பெரியதாக கடல் நீல நிறத்தில் இந்த தேவாலயம் அமைதியாக இருக்கிறது. அதை பார்த்து விட்டு, அருகில் இருக்கும் குன்றில் எழுப்பப்பட்டிருக்கும் புனித சிலுவை ஆலயத்திற்கு சென்றோம். இது சவேரியாரின் வருகைக்கு முன்னே  எழுப்பப்பட்ட ஆலயம் என்று  தெரிகிறது. 

இந்த ஆலயத்தின் அருகிலேயே சவேரியார் இங்கே வசித்ததாக நம்பப்படும் குகை ஒன்றும் இருக்கிறது. நாங்கள் சென்றவுடன் அங்கிருந்த பெரியவர் ஒருவர் குகையை திறந்து காட்டினார். வெளியே மிகுந்த வெப்பமாக இருந்த நேரத்தில், குகை மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. மிகவும் சிறிய  குகையில் ஒரு சிலுவையும் இருக்கிறது. குகையில் ஒரு நன்னீர் கிணறும் இருக்கிறது. அதில் ஒரு வாளி நீரை எடுத்து எங்களுக்கு குடிக்க கொடுத்தார்.



இங்கும் கடலை நோக்கியும், கடலை ஒட்டியிருக்கும் மணப்பாடு கிராமத்தை நோக்கியும் பார்த்தவாறு ஒரு குருசும் இருக்கிறது. இதுவும் சற்றே வளைந்த கூனன் குருசாகவே இருக்கிறது. இதையும் சவேரியார் இங்கே வைத்ததாக அந்தப் பெரியவர் கூறினார். 



அங்கிருந்து கீழே மீண்டும் வந்து, மணப்பாட்டில் இருந்து கிளம்பினோம். வழியிலேயே இருந்த கருவாட்டு கடையில் நெய் மீன் கருவாடும் வாங்கி கொண்டு, உவரியை நோக்கி சென்றோம்.

உச்சி வேளையில் உவரியை  அடைந்தோம். புனித அந்திரேயா ஆலயத்தில் கிறிஸ்துமஸிற்கான ஆராதனையின் ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. சில நடுத்தர வயது பெண்களும், சிறுமிகளும் இசையுடன் பாடல்களை பாடிக் கொண்டிருந்தார்கள். சிறிது  நேரம் கேட்டு கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். 

உவரியில் இருந்த மற்றொரு ஆலயம் மூடியிருந்தது. எனவே அங்கேயே ஒரு சிறிய கடையில் மீன்குழம்புடன் சாப்பிட்டுவிட்டு இடையன்குடியை நோக்கி கிளம்பினோம்.

No comments:

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...