Showing posts with label சுந்தர ராமசாமி. Show all posts
Showing posts with label சுந்தர ராமசாமி. Show all posts

சுந்தர ராமசாமியுடன் இரண்டு நாட்கள்

1993 இல்  நான் திருநெல்வேலியில் இருக்கும் அரசு பொறியியல் கல்லூரியில் என்னுடைய இளங்கலை பொறியியல் படிப்பிற்காக சேர்ந்தேன். பொறியியல் பற்றியோ இல்லை அதை ஏன் படிக்கிறேன் என்றோ பெரிய புரிதல் இருந்ததில்லை. அரசு கல்லூரியில் கிடைத்தது - படித்தேன் - அவ்வளவே.

1994-95 இல் இரண்டாம் ஆண்டில் மின்னணுவியல் துறையில் சேர்ந்தேன். அதை பற்றியும் ஒன்றும் தெரியாது. என் அண்ணா ஒருவர் அதை படித்திருந்தார் எனவே நாமும் படிப்போம் என்ற ஒரு காரணமே.

அப்போது எங்கள் super senior - நான்காமாண்டு மாணவர்கள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டது. மெய்யப்பன், PLK, RSB மற்றும் பாஞ்சை பாலன் (எ) கற்பகவிநாயகம்.

அதுவரை என்னுடைய வாசிப்புகள் எல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. ஆங்கில இலக்கியம் தாண்டி ருஷ்ய இலக்கியம் வாசித்திருந்தேன். தமிழ் இலக்கியத்தில் சுஜாதா , கல்கி, பாரதி தாண்டி வாசித்ததில்லை. சுஜாதா மூலம் மணிக்கொடி எழுத்தாளர்கள் மற்றும் சிலரை பற்றி கேட்டிருந்தாலும், வாசிப்பதில் பெரிய ஈடுபாடு இருந்ததில்லை.

இந்த கல்லூரி சீனியர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். அப்போது அவர்களை எவ்வளவு பிரமிப்புடன் பார்த்தேன் என்பதை என்னால் விவரிக்க முடியாது.

திருநெல்வேலியில் அப்போது 'காஞ்சனை'  என்று ஒரு பிலிம் சொசைட்டி இயங்கி வந்தது. அவர்கள் சில நாட்களில் திருநெல்வேலியில் ஏதேனும் ஒரு சினிமா அரங்கில் திரைப்படங்களை நிகழ்த்துவார்கள். ரத்னாவில் பெரும்பாலும் இந்த படங்கள் திரையிடப்படும். அதற்கு எதுவும் பணம் கட்டியதாக நினைவில்லை. சில நண்பர்களுடன் அங்கே அடூர் மற்றும் பல இந்திய இயக்குனர்களின் முக்கியமான சில படங்கள் பார்த்திருக்கிறேன்.

நிற்க, இது அதை பற்றியதல்ல. மேற்சொன்ன நால்வருடன், இன்னும் சில நண்பர்களுடன் நாங்கள் நாகர்கோயிலில் சுந்தர ராமசாமியை பார்த்தது பற்றியது.

எனக்கு அதன் பல விஷயங்கள் இப்போது நினைவில்லை. நினைவில் இருப்பதை பகிர்கிறேன்.

நாகர்கோயிலில் இரண்டு நாட்களுக்கு தமிழ் பல்கலைக்கழக முதல் துணை வேந்தர் வ.ஐ.சுப்பிரமணியம் அவர்களின் வீட்டில் தங்கி அப்போதைய தமிழ் இலக்கிய ஆளுமைகள் சிலரை 
சந்திப்பதாக ஏற்பாடு.   அவரின் ( வ.ஐ.சுப்பிரமணியம் ) இளைய மகன் அருண் என்னுடைய super சீனியர்களில் ஒருவர்.  அவர்களது ஏற்பாடு.  மெய்யப்பனும் மற்ற நண்பர்களும் என்னிடம் கேட்ட போது , எனக்கு சுந்தர ராமசாமி யாரென்றே தெரியாது. இருந்தாலும் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.
சுந்தர ராமசாமி அவர்களுடன் 

எழுத்தாளர் நீல. பத்மநாபன் மற்றும் பேராசிரியர் அ.மங்கை அவர்களுடன்.

நாகர்கோயிலில் ஒரு குறுகிய தெருவில் சுந்தர ராமசாமி அவர்களின் வீட்டிற்கு அருகில் ஒரு கட்டப்பட்டு கொண்டிருந்த வீட்டில் தான் இந்த நிகழ்வு. அங்கேயே தங்கி விட்டு காலை, மாலை என்று வந்த ஒவ்வொரு எழுத்தாளர்கள் , சமூக செயல்பாட்டாளர்கள் என்று பலருடனும் உரையாடல்கள். இது எல்லாம் எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவம்.

தோப்பில் முகமது மீரான் வந்திருந்தார். அப்போது வாசித்ததில்லை எனினும் அவரின் எளிமையான தோற்றமும் , அணுகக்கூடிய பேச்சும் நினைவில் இருக்கிறது. மலையாளமும் தமிழும் கலந்த அந்த நாகர்கோயில் பேச்சு எளிதில் மறக்க முடியாதது.

நினைவில் இருக்கும் இன்னும் ஒரு நபர் - அ. மங்கை. நாடகாசிரியர். அவர் நினைவில் இருப்பதற்கு முக்கிய காரணம் - அவர் பேசிய எதுவுமே அன்றைக்குப் புரியவில்லை. அவர் எடுத்து காட்டிய விஷயங்கள் பற்றி எனக்கு எந்த புரிதலும் இல்லை.

சுந்தர ராமசாமி அவர்களை அந்த இரண்டு நாட்களில் 2-3 முறை சந்தித்ததாய் நினைவு. அப்போதும் அவரை பற்றி ஒன்றுமே தெரியாததால் எல்லோரும் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தது மட்டும் நினைவிலிருக்கிறது. பேசிக் கொண்டிருந்த போது இடையே சொன்னார் - "எழுத்தாளரை சந்திக்க வரும் போது அவரின் படைப்புகள் ஒன்றிரண்டையாவது வாசித்து வாருங்கள் " என்று. அதை ஒரு வருத்தமாகவோ , கோபத்துடனோ சொன்ன மாதிரி நினைவில்லை. கொஞ்சம் சிரித்துக் கொண்டே சொன்னார்.

அந்த நிகழ்வுக்கு சில நாட்கள் பின் "ஜே.ஜே. சில குறிப்புகள்" வாசித்து விட்டேன். அதை வாசித்து விட்டு பல நாட்கள் அந்த ஜே.ஜே  சந்தித்த அந்த பிச்சைக்காரனை மறக்க முடியாமல் தவித்திருக்கிறேன். சு.ராவை சந்திப்பதற்கு முன் வாசித்திருந்தால் பல கேள்விகள் கேட்டிருக்கலாமே என்று சிலமுறை யோசித்திருக்கிறேன்.

அந்த இரண்டு நாட்கள் என் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருந்தது என்று எழுத ஆசைதான். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. நான் அதே அறியாமையுடன் இன்னமும் சில வருடங்கள் இருந்து பிறகு யதேச்சையாக இலக்கியம் வாசிக்க ஆரம்பித்தேன் என்பதே உண்மை.

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...