வல்லம் மற்றும் திருக்கழுக்குன்றம் குடைவரைகள்.

வல்லம் குகைகள் சென்னைக்கு அருகில் இருப்பதால் அதை பார்க்காமலேயே வைத்திருந்தேன். இன்னமும் சில பல்லவ குடைவரைகள் பார்க்காமல் இருந்தாலும், இதை எப்போது வேண்டுமென்றாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். ஒரு வழியாக, இந்த வாரம் வல்லம் குகைகளையும், அத்துடன் திருக்கழுக்குன்றம் குடைவரையையும் பார்த்துவிடுவது என்று முடிவு செய்தேன். ஜெயஸ்ரீயும் சேர்ந்து கொள்ளவே இன்று காலை கிளம்பினோம்.

மகாபலிபுரத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு ஒரு ராஜபாட்டை போட்டால், வழியில் சரியாக திருக்கழுக்குன்றம் மலையும், வல்லம் குன்றுகளும் வழியில் வந்துவிடும். எனவே இங்கும் குடைவரை கோயில்கள் இருப்பதில் ஆச்சர்யமில்லை. 

முதலில் வல்லம். வல்லம் குகைகளை கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருந்தது. செங்கல்பட்டு அருகில் இருக்கும் ஆலப்பாக்கத்தை தேடினால், சென்னையில் இருக்கும் ஆலப்பாக்கம் வருகிறது. ஒருவழியாக அதைக் கண்டு பிடித்து செல்ல ஆரம்பித்தோம். 

செங்கல்பட்டில் இருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஆலப்பாக்கம் என்ற இடத்தின் அருகில் வல்லம் இருக்கிறது. மிகச்சிறிய கிராமமான இதை கண்மூடி திறப்பதற்குள் தாண்டிவிடுவது சாத்தியம். நாங்களும் அப்படி தாண்டி, மீண்டும் வந்த வழியிலேயே திரும்பி வல்லம் செல்லும் சிறிய தெருவிற்குள் நுழைந்தோம். தெருவின் முனையில் ஒரு சிறிய வழிகாட்டியும் இருக்கிறது.

வல்லம் குன்றில் மூன்று குடைவரைகள் இருக்கின்றன. மாலை மட்டுமே அவை திறந்திருந்தாலும். இரண்டிலும் கம்பி கதவுகள் மட்டுமே போடப்பட்டிருப்பதால், வெளியிலிருந்தே நன்றாக பார்க்க முடிகிறது. இருந்தாலும், கோயிலின் செல்லப்பா குருக்கள்(+91 9080589035) வெளியில் சென்றிருந்ததால் வரமுடியவில்லை என்று தெரிவித்தார். அவருக்கு முதலிலேயே போனில் பேசிவிட்டு சென்றால், திறந்து வைத்திருப்பார்.   

 சிறிய குன்றின் மீதேறினால், வலப்பக்கம் முதலில் இருக்கும் சிறிய குடவரை வருகிறது. இதில் ஒரு பக்கம் அமைந்துள்ள கொற்றவையின் சிற்பம் மிகவும் அழகாக இருக்கிறது.

அங்கிருந்து சிறிது மேலேறினால், இரண்டாவது குடைவரை வருகிறது. அதில் முன்பகுதி முழுவதும் இப்போதைய கட்டுமானங்களால் மறைக்கப்பட்டிருக்கிறது. எனவே அதனை அதன் உண்மையான வடிவில் பார்க்கவியலாது. வசந்தீஸ்வரம் என்றழைக்கப்படும் இந்த குடைவரையின் ஒரு பக்கம் ஜேஷ்டா தேவியின் சிலை புடைப்பு சிற்பமாக இருக்கிறது. தவ்வை என்ற தமிழ் தெய்வமான இவள், மூதேவி, அலட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். பல்லவர் காலத்தில் இவளது வழிபாடு பரவலாக இருந்திருக்கிறது. எனக்கு அவளை அமைத்திருந்த விதமே, fertility goddess என்று சொல்ல கூடிய குழந்தைப்பேற்றை வழங்கக்கூடிய பெண் தெய்வங்களின் வடிவமாக தெரிந்தது. இதே போன்ற வடிவங்கள் உலகம் முழுவதும் ஒன்று போல இருப்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று.


மற்றொரு பக்கம் விநாயகர் புடைப்பு சிற்பமாக இருக்கிறார். மகேந்திரவர்மன் காலத்தை சேர்ந்த இந்தக் குடவரை முழுவதும் தற்காலத்திய கட்டுமானங்களால் மூடப்பட்டுள்ளது. எனவே மகேந்திரவர்மனின் தூண்களையும் சிற்பங்களையும் பார்ப்பது சற்று சிரமமாகவே இருக்கிறது. என்றாலும் அதன் இருபக்கமும் இருக்கும் காவலர்களையும், கருவறையையும் அப்படியே வைத்திருப்பதால், அவற்றை ரசிக்கலாம். 

ஆனால் இங்கு பார்க்கவேண்டிய ஒன்று என்றால், அழகிய பல்லவ தமிழ் வரிவடிவங்களில் எழுதப்பட்டிருக்கும் சில வரி கல்வெட்டுகள்தான். ஒன்று 'லலிதாங்குரன்' என்ற மகேந்திரவர்மனின் பட்டப்பெயரையும், இன்னொன்றில் சத்துருமல்லன், குணபரன் என்ற பட்டப்பெயர்களையும் சொல்கிறது. 

மேலும் குடைவரைகளை எடுப்பித்த கந்தசேனன் என்பவரின் பெயரையும் பதிவு செய்கிறது. பல்லவ வரிவடிவங்களின் அழகை ரசிக்க மட்டுமே முடியும். விவரிக்க முடியாது. இன்றும் தமிழ் இப்படி எழுதப்படுமானால், தமிழின் இனிமையோடு, அழகும் பல மடங்கு அதிகரித்துவிடும். இவை மகேந்திரவர்மனின் வரிவடிவங்கள். ராஜசிம்மனின் காலத்தில்  இன்னமும் பூக்களை கோர்த்தது போல எழுதப்படும் வரிவடிவங்களே பல்லவ கிரந்தத்தின் உச்சியாகும்.






இதற்கு நேர் கீழ் இருக்கும் குடைவரையின் முன் தியான மண்டபம் எழுப்பப்பட்டு, மறைவாக இருந்ததால், எங்களால் பார்க்க முடியவில்லை. எனவே அங்கிருந்து திருக்கழுக்குன்றம் சென்றோம்.

550 செங்குத்தான படிகளை ஏறுவது மிகவும் சிரமமே. இருந்தாலும், மெதுவாக ஏறிவிட்டோம். அங்கிருக்கும் வேதகிரீஸ்வரர் கோவிலை சென்றடைந்தோம். அங்கே இருந்த சோமாஸ்கந்தர் சிலை, இதுவும் பல்லவர் கால கோவிலாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பியது. இருந்தாலும், வேறு எந்த விதத்திலும் அதை தெரிந்து கொள்ள முடியவில்லை. இறங்கும் வழியில் இருக்கும் ஒரு கால் மண்டபம் நாங்கள் செல்வதற்குள் மூடப்பட்டுவிட்டதால், வெளியிலிருந்தே பார்த்துவிட்டு சென்னை திரும்பினோம்.  

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...