அஞ்ஞாடி - 1

படித்து முடித்து ஒரு மாதம் ஆகிறது. 'அஞ்ஞாடி'இன் கதைகள் இன்னமும் முழுமையாக உள் வாங்க படவில்லை. சென்ற வருடமே வந்து இருந்தாலும் 'அஞ்ஞாடி' சிவகாசி கொள்ளை பற்றி பேசுவது மட்டுமே இந்த வருடம் வாங்குவதற்கு உந்துதலாக இருந்தது. 

25 வருடங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறைகள் எல்லாம் சிவகாசி வடக்கு ரத வீதியில் இருந்த என் மாம்பா (அம்மாவின் அப்பா) வீட்டில்தான் கழியும். பகல்கள் எல்லாம் பட்டாசு கட்டு ஒட்டவும், சில சமயம் தீப்பட்டித் தாள் ஓட்டுவதிலும் ஓடும். பகல் காட்சி 'ஒலிம்பிக்' சினிமாவிலும், 'பழனியாண்டவர்' பெஞ்சுகளிலும் சிவாஜி, எம்.ஜி.யார் படங்கள் பார்ப்பதும், தேர் இழுப்பது, பத்ர காளி அம்மன் கோவிலுக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வேப்பிலை கட்டி போவதும், கோவிலில் குவிந்து கிடக்கும் வேப்பிலையில் உருண்டு விளையாடுவதுமாக விடுமுறை கழியும்.

நெருக்கமான வீடுகள், ஒரு பக்கம் பாட்டி வீடும் (அம்மாவின் பாட்டி) இன்னொரு பக்கம் சின்ன மாம்பா (அம்மாவின் சித்தப்பா) வீடுமாக தெருவின் ஒரு கடைசியில் ஒரு பெரிய குப்பை கொட்டும் இடம்.
அதற்கு அப்புறம் இருக்கும் புல் மார்கெட்டின் குப்பைகள் எல்லாம் இங்கேதான் கொட்டப்படும். மூக்கை பிடித்துக் கொண்டு குப்பை மேட்டை கடந்து புல் மார்கெட்டின் உள்ளே நுழைந்து குவிந்து கிடக்கும் வாழை பழங்களையும், பலாப்பழங்களையும் கடந்தால் சிவன் கோவிலின் சிவன் சன்னதி தெரு வீதியை அடையலாம்.

அஞ்ஞாடியின் கதை ஆண்டி குடும்பனின் சிறு வயதில் ஆரம்பிக்கிறது. அவனுக்கும் வண்ணான் மாரிக்கும் இருந்த நட்பின் கதைகளில் ஆரம்பிக்கும் கதை அவர்களின் கல்யாணம், குழந்தைகள் ஊர் நடப்புகள், கிளைக் கதைகள் என விரிந்துக் கொண்டே செல்கிறது.

கிளைக் கதைகள், வரலாற்று புனைவுகள், அதன் விளைவுகள் என தட தடவென செல்லும் கதை ஒரு விதத்தில் நம் கிராமங்களின் சாதி கட்டுமானங்களின், 1800களில் புதிதாய் உள்ளே நுழைந்த மதங்களின் கதையாகவும் விரிகிறது.

வெவ்வேறு மனிதர்கள். பஞ்சம் பிழைப்பவர்கள், ஊரை அண்டி வாழும் வண்ணார்கள், சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறைகள் என்று செல்லும் கதை, மூன்று முக்கிய புள்ளிகளில் குவிகிறது.

1870களில் தமிழகத்தில் வந்த தாது வருட பஞ்சம், தென் தமிழகத்தில் நிகழ்ந்த மத மாற்றங்கள், சிவகாசி கொள்ளை. கதை மனிதர்கள் எல்லாம் இந்த மூன்று நிகழ்வுகளிலும் பங்கெடுக்கிறார்கள் மற்றும் பாதிக்க படுகிறார்கள். அவர்கள் வாழ்கை இந்த நிகழ்வுகளுக்கு முன்னும் பின்னுமாய் மாறுகிறது.

தாது வருட பஞ்சம் என்பது கேள்வி பட்டிருந்தாலும், பூமணியின் விவரிப்புகள் மனதை பிசைகிறது. விதை நெல்லையும் சமைக்கும் சம்சாரியில் இருந்து கஞ்சி தொட்டிக்கு போகும் சிறுவர்கள், பசியில் கொத்து கொத்தாய் மரணிப்பவர்கள். பிள்ளையை புதைத்து வந்த நேரத்தில் மனைவியும் இறப்பது, ஒவ்வொருவருக்காக குழி வெட்டாமல் ஒரு நாளைக்கு ஒரு குழி என்று வெட்ட ஆரம்பிப்பது என்று ஒவ்வொரு நிகழ்வும் மனதில் பாரத்தை ஏற்றுகிறது.

தாது வருஷ பஞ்சம் அது வரை தென் கிராமங்களில்  சாதி முறையை மாற்றுகிறது. வெள்ளாமை செய்து வந்த குடும்பர்களும் அவர்களுக்கு காவல் முறை செய்து வந்த தேவர்களும் கஷ்ட நிலைக்கு தள்ளப்பட அதுவரை ஊர் பனைஏறிகளாய் இருந்த நாடார்கள் பண புழக்கத்தில் முன் வருகிறார்கள். பேட்டைகளும், மளிகை கடைகளும் ஊர்களுக்குள் பெருகுகின்றது. ஊர் சாதிகளுக்கும் இருந்த பழக்கங்களும் முறைகளும் மெதுவாய் மாற்றம் பெறுகின்றது.

இதே காலகட்டத்தில் (1820-80களில்)நெல்லையை தலைமை இடமாக கொண்ட பங்கின் மூலமாக சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சத்திரப்பட்டி, கழுகுமலை போன்ற ஊர்களில் தீவிரமாக கிறித்துவ மதத்தை பரப்ப பாதிரியார்கள் வருகிறார்கள். அவர்களுடன் பள்ளிகூடங்களும், சாதி ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலைக்கான நம்பிக்கையும் வருகிறது. இவர்களின் கதையும் ஊடாடி வருகிறது. ராக்லாந்து பாதிரி கிறித்துவத்தை பரப்ப இந்த பகுதி கிராமங்களை எல்லாம் சுற்றி வருகிறார்.

மதம் மாறியவர்கள் எல்லாம் அது வரை இருந்த சாதிய கட்டுபாடுகளுக்கு அடி பணிய மறுக்கும் போது புதிய பிரச்சினைகள் எழும்புகிறது. அதுவரை இருந்த பொருளாதார நிலை மாறும் போது, நாடார்கள் பண முதலாளிகலாய் மாறும் போது, அது வரை சாதிய பிரச்சினையாய் இருந்தது இப்போது கௌரவ பிரச்சினையாகவும் மாறுகிறது.

மதம் மாறிய கிறித்தவ நாடார்கள் சாதிய கட்டுபாடுகளை மீறவும், இந்து நாடார்கள் தங்கள் பொருளாதார மேம்பாடு சாதிய தாழ்ச்சியை ஒழித்து கட்டியதாய் கோவில்களில் நுழையும் உரிமைக்கு போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். அது வரை இருந்து வந்த கட்டு முறைகளை மீற முயலும் இந்த முயற்ச்சிகள் கடுமையான எதிர்ப்பை சந்திக்கின்றன.

எட்டயபுரம் ஜமீனில் உள்ள கழுகு மலையில் பல்லக்கில் போகும் உரிமையை கேக்கும் நாடர்களால் இந்த மோதல் பெரிய கலவரமாய் வெடிக்கிறது. 1895இல் கழுகுமலை ரத வீதியில் கிருத்துவர்கள் போட்ட பந்தல் தேர் சுற்றி வர தடையாய் இருப்பதாக சொல்லி ஏற்படும் கலவரத்தில் 10 உயிர்கள் பலியாகின்றன. எட்டயபுரம் ஜமீனின் மேனேஜர்ரும் இந்த கலவரத்தில் செத்து போகிறார்.

1 comment:

Rathnavel Natarajan said...

அஞ்ஞாடி புத்தகம் - திரு பூமணி அவர்கள் எழுதியது.
விமர்சனம் பகுதி 1 படித்தேன்.
நன்றி.

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...