வெண்ணிற இரவுகளும் வேட்டைக்காரனும்

சென்ற வாரம் மும்பை விமான நிலையத்தில் நேரத்தை கடத்திய போது செக்காவின்வேட்டைக்காரன்’ (The Huntsman) சிறுகதை வாசிக்க தோன்றியது. கடைசியாக எப்பொழுது வாசித்தேன் என்று நினைவில்லை. இணையம் தான் எவ்வளவு உன்னதமானது
செக்காவ் இக்கதையை குளியலறையில் எழுதியதாக கேள்விபட்டிருக்கிறேன். அது எவ்வளவு உண்மை என்று தெரியாது. அது கொஞ்சம் மிகையாகவே தெரிகிறது.

'வேட்டைகாரன்' கதை எளிதானது. எளிதான கதைகளே மிக அரிதாக எழுதப்படுகின்றன. இகோர் ஒரு வேட்டைக்காரன். வேட்டைக்கு வந்த இடத்தில அவனது 12 வருட மனைவியை சந்திக்கிறான். 12 வருடத்தில் அவன் சில முறையே அவளை பார்த்திருக்கிறான். பொருந்தாத அந்த மணத்தில் அவனுக்கு நாட்டமில்லை. அவர்களின் சந்திப்பு, அவள் கெஞ்சல்களிலும், அவனது மறுதலிப்புகளுமாக கழிகிறது. அவன் இன்னொரு பெண்ணுடன் இருப்பதை கேட்டுக் கொள்கிறாள். அவன் பிரிந்து செல்கிறான். அவள் அவன் செல்வதை பார்த்துக் கொண்டே இருக்கிறாள்.

தாஸ்தாவ்ஸ்க்கியின் 'வெண்ணிற இரவுகள் (White Nights)' மனதிற்கு பிரியமான கதைகளில் ஒன்று. இதுவும் ஒரு எளிதான கதைதான். கதையின் நாயகன் ஒரு நாள் இரவில் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரில் ஒரு பாலத்தில் நஷ்ட்டங்காவை சந்திக்கிறார். அவள் ஒரு வருடம் கழித்து அந்த பாலத்தில் சந்திப்போம் என்று சொன்ன காதலனை காணாமல் அழுது கொண்டிருக்கிறாள். அடுத்த 4 இரவுகள் அவர்கள் இருவரும் அதே பாலத்தில் காத்திருக்கிறார்கள். அவன் அவள் மீது காதல் கொள்கிறான். நான்காவது நாள் இரவில் திரும்பும் போது அவனது காதலை சொல்கிறான். அதே நேரத்தில் அவளது காதலன் வருகிறான். நஷ்ட்டங்கா அவனுடன் சென்று விடுகிறாள்.

இரண்டு கதைகளும் காட்டுவது காதலின் ஒரு குறுக்கு வெட்டு தோற்றத்தை. ஒரு தலை காதலின் துயரம் இரண்டிலும் வெளிப்படுகிறது. 'வேட்டைக்காரணின் மனைவிக்கு அவன் வீட்டிற்கு வருவதால் அவளுக்கு ஊருக்குள் கிடைக்கும் சிறு மரியாதை, அவன் வேறு ஒருவளுடன் இருப்பதை அறிந்து கொள்ள அவள் கேட்கும் கேள்விகள், இறுதியில் அவன் பிரிந்து செல்லும் போது அவன் தொப்பி மறையும் வரை அவள் அவனை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

சந்திப்புகள் எல்லாம் பிரிவில் தானே முடிகின்றன? அதுவும் ஒருவர் மட்டுமே துயருறும் பிரிவுகள் எவ்வளவு கடினமானவை.

நஷ்ட்டங்காவின் பிரிவும் அவ்வாறே நிகழ்கிறது. அவள் நாயகனை காதலித்தாளா என்பது ஒரு சிறு மர்மமாகவே இருக்கிறது.  அவனோ தொடங்கும் முன்னே தோல்வியுற்ற காதலுடன் தன தனிமையான வாழ்வை தொடருகிறான்.

பெலகயாவோ - இகோரின் மனைவி - காதலற்ற திருமணத்தில் கணவனை காதலிப்பவள். அவனை விட்டு விலகவும் முடியாமல், கிராமத்தில் தனியே வாழ்பவள் என இருக்கும் பெயரின் பின் ஒரு மரியாதைக்காக அவனின் வருகையை எதிர்பார்த்து ஏமாறுகிறாள். 

இரு கதைகளும் காட்டும் காதலின் ஒரு வெட்டு தோற்றம் சோகமானதாக தெரியலாம். ஆனால் வெள்ளை இரவுகளின் இறுதியில் அதன் நாயகன் சொல்வது போல் 'காதல் என்பது ஒரு கணத்தின் மகிழ்வே..ஒரு முழு வாழ்க்கைக்கும் இந்த ஒரு கணம் போதுமா?'

1 comment:

Unknown said...
This comment has been removed by a blog administrator.

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...