அறியப்படாத கிறிஸ்துவமும், அய்யனார் கதையும் - 1

 ஆய்வாளர் நிவேதிதா லூயிஸின் 'அறியப்படாத கிறிஸ்துவம்' புத்தகத்தை வாசித்ததில் இருந்து அதில் இருந்த சில இடங்களை சென்று பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது. குறிப்பாக, தூத்துக்குடியை சுற்றியிருந்த இடங்கள். அதற்கு இரண்டு காரணமுண்டு.

தூத்துக்குடி என்னுடைய சிறுவயதில் இருந்து நான் சென்று வரும் நகரம். என் அய்யப்பாவின் அக்கா அங்கேதான் இருந்தார். இன்றும் அங்கே எனது மாமாக்கள் மற்றும் தங்கைகள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால் இப்போது அனைவரிடமும் தொடர்பு விட்டுப்போய் விட்டது. இரண்டாவதாக, தேரிக்காடு. மூன்று தலைமுறைக்கு முன்னர் என்னுடைய பாட்டன், பூட்டன்கள் தேரிக்காட்டை சுற்றியிருந்த காடுகளில் பனையேறியும், கள்ளு இறக்கியும், கருப்பட்டி காய்ச்சியும்தான் வாழ்ந்து வந்தார்கள். என் அப்பா வழித் தாத்தாவின் அப்பாதான் அங்கிருந்து சிவகாசி வந்து மளிகை கடை வைத்தது. அவர் அப்படியான ஒரு முடிவை எடுக்காவிட்டால் நான் இருந்திருப்பேனா என்று பல முறை யோசித்திருக்கிறேன். தேரிக்காட்டில் அலைந்து கொண்டிருக்கும் பல அய்யனார்களில், என்னுடைய அம்மாவழி பாட்டியின் குலதெய்வமான கற்குவேல் அய்யனார் கோவிலுக்கும் சென்று வரலாம் என்று ஒரு எண்ணம். 

கிறிஸ்துமஸை ஒட்டிய நாட்களில் தூத்துக்குடி நகரம் கோலாகலமாக இருக்கும் என்பதால் அதையும் பார்த்துவிட தோன்றியது. இந்தப் பகுதியில் தூத்துக்குடி மட்டுமே பெரிய நகரம் என்பதால் அங்கேயே தங்கிவிட முடிவு செய்தேன். மதுரையில் இருந்து வாடகை கார் ஒன்றை (ஸெல்ப் டிரைவ்) எடுத்துக் கொண்டு, என் மனைவியுடன் காலையில் கிளம்பினேன். இது போன்ற பயணங்களுக்கு சரியான துணை தேவை. என் மனைவியை போன்ற துணை வெகு அரிதாகவே அமையும்.

எங்களது குலதெய்வம் பாதமுத்து அய்யனாரின் கோயில் சிவகாசியில் இருக்கிறது. தேரிக்காட்டில் இருக்கும் கோயில் ஒன்றில் இருந்து பிடிமண் எடுத்து வந்து கட்டப்பட்ட கோவில் இது. நாங்கள் கிளம்பிய அன்று காலை, என் அம்மா தேரிக்காட்டிற்கு அருகில் நாலுமாவடியில் அந்தக் கோவில் இருப்பதாக எனது பெரியம்மா ஒருவர் கூறியதாகவும், ஆனால் எந்த கோவில் என்று தெரியாது என்றும் கூறினார். எனவே அந்தக் கோவிலை கண்டறிய முயலலாம் என்றும் முடிவு செய்து கொண்டேன். எங்களது பயணம் தொடங்கியது.


ஜேசு கோவில், பழையகாயல்.

தூத்துக்குடியை சென்றடைந்தவுடன், அறையில் சாமான்களை வைத்து விட்டு, அருகில் இருந்த பிரேமா மெஸ்ஸில் மீன்குழம்பு சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். 

'அறியப்படாத கிறிஸ்துவம்' நூலில் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களின் அட்ச, தீர்க்க ரேகைகள் கொடுக்கப்பட்டிருந்தன என்பதால் அந்த இடங்களை வரைபடத்தில் கண்டறிவது எளிதாகவே இருந்தது. ஆனால் அந்த இடங்களை சென்றடைவது இன்னொரு கதை.

நான் அந்த இடத்தின் ஆயங்களை கூகிள் வரைபடத்தில் கொடுத்தவுடன், அது வழியை காட்டத்தான் செய்தது. ஆனால் அவை எல்லாம் கார் செல்லும் அளவிலான பாதைகள் இருக்கின்றனவா என்றெல்லாம் பார்த்து சொல்லப்படுவதல்ல. மாறாக அங்கு சென்று சேர ஒரு நிமிடம் குறைந்தாலும் அதையே பாதையாக காட்டுகிறது. நகரங்களில் மிகுந்த துல்லியமாக இருக்கும் வரைபட பாதைகள், கிராமங்களில் ஒரு குத்துமதிப்பாக மட்டுமே சரியாக இருக்கின்றன. இந்தப் பயணம் முழுவதும் கூகிளின் துணையோடு நான் செல்ல திட்டமிடாத பல இடங்களுக்கும் செல்ல சேர்ந்தது. 

பழையகாயலுக்கு செல்லும் பாதையும் அப்படியே அமைந்தது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் இருப்பதை அடைய, கூகுளை என்ன பல கிராமங்களுக்குள் சுற்றலில் செலுத்திவிட்டது. இறுதியாக சென்ற சில கிலோமீட்டர்கள் ஒருபக்கம் முழுவதும் கருவேலம் செடிகள் அடர்த்தியாக வளர்ந்து சாலையை மறைத்திருந்தது. எதிரே ஒரு இரண்டு சக்கர வாகனம் வந்தாலும், எந்தப்பக்கத்திலும் இறங்க முடியாது. ஒருபக்கம் வயல், இன்னொரு பக்கம் பள்ளம். ஒருவழியாக திருச்செந்தூர் ரோட்டை சென்றடைந்தோம்.

மீண்டும் சாலையில் இறங்கி, பரந்து கிடக்கும் உப்பளங்களின் இடையே, காரின் சஸ்பென்ஷனை மட்டும் நம்பி தைரியமாக சென்றால் ஜேசு கோயிலை அடையலாம். 

தென் தமிழகத்தின் முதல் கிறிஸ்துவ கோயில்களில் ஒன்று இந்தக் கோயில். இங்கிருக்கும் கூனன் குருசுகளை பார்க்கவே இங்கு வந்தோம். போர்த்துகீசியர்கள் முதலில் தென் தமிழக கடற்கரைகளுக்கு வந்த பொழுது, அவர்கள் தங்களது மதத்தை பரப்புவதன் பொருட்டு, அவர்கள் இறங்கிய கடற்கரைகளில் மரச் சிலுவையை நட்டுவைத்தார்கள். அதை சுற்றியே கிறிஸ்துவர்களின் குடியிருப்புகள் தோன்றியிருக்க வேண்டும். (இது குறித்து புத்தகத்தில் விரிவாக இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் அங்கே வாசித்துக் கொள்ளலாம்.)




ஜேசு கோயில் மிகவும் சிறிய கோயில். ஒரு வளைவின் நடுவே இருக்கும் பீடத்தில் மரித்துக் கிடக்கும் இயேசுவின் சிலை இருக்கிறது. பீடத்தின் கீழே, இரு புறமும் கூனன் குருசுகள் இருக்கின்றன. ரோமை கத்தோலிக்க வழக்கத்தின் படியாக, இந்த மரகுருசுகளின் மீது பக்தர்கள் எண்ணையை விட்டு அபிஷேகம் செய்கிறார்கள். குருசில் இருந்து வடியும் எண்ணையை பல நோய்களுக்கும் மருந்தென கருதி எடுத்து செல்கிறார்கள். 

கோயிலின் நேரெதிரே, இப்போது வைக்கப்பட்டிருக்கும் கொடிக்கம்பத்தின் கீழே, பீடத்தின் மேலே மரத்தால் செய்யப்பட்ட கூனன் குருசு ஒன்று இருக்கிறது. இங்கும் எண்ணெய் அபிஷேகமும், வடியும் எண்ணெய்யை பிடிக்க கீழே சிறிய இடமும் இருக்கிறது. 

உள்ளே இருக்கும் இயேசு பீடமும், குருசுகளும் மட்டுமே முதலில் இருந்திருக்க வேண்டும். இப்போது இருக்கும் சிறு கட்டிடமும், சுற்றியிருக்கும் அறைகளுக்குப் பின்னர் கட்டப்பட்டவை. இன்று கோவிலில் ஒரு காவலாளி மட்டுமே இருக்கிறார். மொட்டை வெயிலில், அத்துவான காட்டில் இருக்கும் அங்கே வந்திருந்த எங்களை சற்று வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு முறை கோவிலை சுற்றி வந்தவுடன், அவருடன் அமர்ந்து சிறிது பேசிக் கொண்டிருந்தோம்.

அருகிலேயே ஒரு பாட்டிம்மாவும், அவரது பேரனுடன் இருந்தார். பதினைந்து வயது மதிக்கத்தக்க அவரது பேரன் படுத்துக் கொண்டிருந்தான். காவலாளி பிடி கொடுக்காமல் பேசிக் கொண்டிருந்தார். கோவில் பற்றிய எந்த விவரங்களும் எங்கும் இல்லை. அவருக்கும் தெரியவில்லை. மறுநாள் சாமியார் வந்து பூசை போடுவார் என்றும், மற்றபடி பழையகாயிலில் இருக்கும் பரிபூர்ண மாதா கோவிலில்தான் அனைவரும் இருப்பார்கள் என்றார். 

அவரது பெயரை கேட்டபோது, எதற்கு கேட்கிறேன், என்ன விஷயம் என்றெல்லாம் கேட்டுவிட்டு, அது முக்கியமில்லை என்று சொல்லிவிட்டார். இப்போது பாட்டிம்மா பேசினார். தானும் அவரிடம் ஏழு நாட்களாக பெயரை கேட்பதாகவும், அவர் பெயரை சொல்ல மறுப்பதாகவும் கூறினார். பாட்டிம்மா உவரியில் இருந்து வந்திருப்பதாகவும், தன்னுடைய பேரனுக்கு சிறிது உடல்நிலை சரியில்லை என்பதால், ஜேசு கோவிலில் பத்து நாட்கள் இருந்து போவதாக நேர்ந்து கொண்டிருந்ததால், அங்கே வந்து தங்கியிருப்பதாகவும், இன்னமும் இரண்டு நாட்களில் கிளம்பப் போவதாகவும் தெரிவித்தார். அங்கேயே சமையல் செய்து கொண்டிருப்பதாகவும் கூறினார். 

சற்று தொலைவில் கடல் அலைகளின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அங்கிருந்து புன்னைக்காயல் நோக்கி கிளம்பினோம்.    

No comments:

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...