அறியப்படாத கிறிஸ்துவமும், அய்யனார் கதையும் - 2

புன்னைக்காயல்.

கூகிளாண்டவரின் உதவியால் இப்போதும் ஆத்தூர் பாலத்தை தாண்டியவுடன் இடது பக்கத்தில் இல்லாத தெருவில் திரும்ப முயன்று, பாலத்தை சுற்றி வந்தேன். ஒருவழியாக புன்னைக்காயல் செல்லும் பாதையை கண்டு செல்ல ஆரம்பித்தோம்.

தாமிரபரணியில் நீர் நிறைந்து ஓடிக் கொண்டிருந்தது. ஏரல் சேர்மா கோயில் சிறிது தூரத்தில்தான் இருந்தது. செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் நேரமில்லை என்பதால் புன்னைக்காயல் நோக்கி சென்று கொண்டிருந்தோம்.

புன்னைக்காயல் செல்லும் பாதை மிகவும் சேதமடைந்து இருந்தது. மெதுவாகவே செல்ல வேண்டியிருந்தது. காயல் பகுதியின் நில அழகை பார்த்து மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். சுள்ளென்று உரைக்கும் வெயில், சுற்றிலும் தாமிரபரணி நீர், ஒரு பக்கம் அலையடிக்கும் கடல், எங்கும் கடல் மணல் மிகுந்த சூட்டோடு இருந்த இடத்தின் மக்களும் அது போலவே மிகுந்த கரடுமுரடாகவும், அதைவிட மிகுந்த உதவி புரிபவர்களாகவும் இருக்கிறார்கள். 

தூய ராஜகன்னி மாதா ஆலயத்திற்கு முதலில் சென்றோம். தமிழக கடற்கரையில் போர்த்துகீசியர்கள் முதலில் தடம் பதித்த இடங்களில் புன்னைக்காயலும் ஒன்று. பல்வேறு தமிழ் மொழி புத்தகங்களை எழுதிய ஹென்றி ஹென்றிக்ஸ் வாழ்ந்த இடம். தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம் இருந்த இடமும் இதுதான்.

இவ்வளவு பெருமைகளை தாங்கி கொண்டிருக்கும் புன்னைக்காயல் இன்று சற்றே பெரிய கிராமமாக, அதன் பழம்பெருமையை பறை சாற்றும் எந்த அடையாளமுமின்றி இருந்து வருகிறது. 

நாங்கள் சென்ற எல்லா தேவாலயங்களை ஒட்டி ஒரு மருத்துவமனையும், பள்ளியும் கட்டாயம் இருந்தது. மக்களுக்கு கல்வியையும், சுகாதாரத்தையும் வழங்குவதற்கு பாதிரிகள் எத்தகைய முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதற்கு இவை இன்னமும் சாட்சியாக இருக்கின்றன. தேவாலயங்களுடன் அவர்கள் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் சேர்த்தே கட்டியிருக்கிறார்கள். அப்போது தமிழகமெங்கும் இருந்த அரசர்களும், ஜமீன்தார்களும் தாங்கள் வரியாக பெற்ற மக்களின் பணத்தை என்னதான் செய்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. 

470 வருட பழமையான தூய ராஜகன்னி மாதா ஆலயத்திற்கு அருகிலும் பள்ளி ஒன்று இருக்கிறது. பள்ளி முடியும் நேரத்தில் நாங்கள் சென்றதால், கோயிலுக்கு முன்னிருந்த மைதானம் முழுவதும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அருகிலேயே இருந்த சவேரியார் தேவாலயத்திற்கு வழி கேட்டு சென்றால், அது மூடப்பட்டிருந்தது. மறுநாள் காலையில்தான் திறப்பார்கள் என்றதால், அங்கிருந்து கிளம்பலாம் என்று நினைத்தோம்.

மாலையாகிவிட்டதால் அங்கிருந்த சிறிய கடையில் டீ குடிக்க நின்றோம். ராமேஸ்வரத்தில் நல்ல மழை என்று காலையில் பார்த்திருந்தேன். எனவே கடைக்காரரிடம் 'இங்கெல்லாம் மழை பெய்யாதா?' என்று கேட்டேன். என்னருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் 'இங்கெல்லாம் பெய்யாது. சவேரியார் வாக்கில்ல.' என்றார். அது என்ன சவேரியார் வாக்கு என்று கேட்டதற்கு, சவேரியார் மரணப்படுக்கையில் புன்னைக்காயல் மக்களிடம், அவர்களது கிராமத்தை தீயும், வெள்ளமும் ஒன்றும் செய்து என்று வாக்கு கொடுத்திருக்கிறாராம். அதனால் புன்னைக்காயலில் எப்போதும் புயல், மழை இருக்காது என்றார். கொஞ்சம் வெயிலை குறைவாக அடிக்க சொல்லியிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே கிளம்ப நினைக்கையில், பக்கத்தில் இருந்த தெருவில் ஒரு குருசடி இருப்பதாகவும், அதையும் பார்த்துவிட்டு செல்லுங்கள் என்றும் கூறினார்.

ஊரே கிறிஸ்துமசிற்கு தயாராகிக் கொண்டிருந்தது. அனைவரும் தோரணம் கட்ட, வண்ண விளக்குகள் கட்ட, புது துணிகள் வாங்க என்று பரபரப்பாக இருந்தார்கள். நாங்களும் அருகில் இருந்த தெருவிற்கு சென்றால், அங்கும் ஒரு கூனன் குருசு இருந்தது. பீடத்தின் மேல் இருந்த அதில் இருந்து வடியும் எண்ணையை பிடிக்க கீழே சிறு மாடமும் இருந்தது. பழமையான குருசா அல்லது சமீபத்திய ஒன்றா என்று தெரியவில்லை. அங்கிருந்தவர்கள் அது பழமையானது என்றே சொன்னார்கள். 

அங்கிருந்து அடுத்து குரும்பூர் கிளம்பினோம்.

போர்த்துகீசியர் வருகைக்கும் முந்தைய தேவாலயமாக கருதப்படும் விசேந்தியப்பர் ஆலயத்தை நோக்கியே எங்கள் பயணம் இருந்தது. திருச்செந்தூர் ரோட்டில் இருந்து பிரியும் சிறிய பாதையில் பயணத்தை தொடர்ந்தோம். ஆனால், இங்கும் விசேந்தியப்பர் ஆலயம் மூடப்பட்டிருந்தது. வெளியில் இருந்து பார்த்துவிட்டு, அய்யனாரைத் தேடி நாலுமாவடிக்கு கிளம்பினோம்.

No comments:

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...