பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - 2

பட்டீஸ்வரம்

'தேனுபுரீஸ்வரர்' கோயிலில் நுழைந்தவுடன் ஒரு அதிர்ச்சி காத்து இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் ஒரு பெரிய கான்க்ரீட் மண்டபத்தில் துர்க்கை சன்னதி. தரை முழுதும் மார்பிள் மேவப் பட்டு நமது 21ம் நூற்றாண்டு கலை அம்சத்துடன் கோயில் இருந்தது. இது போக பச்சை, சிகப்பு டிக்கெட் புத்தகங்களுடன் மேலும் எதோ நற்ப்பணிக்காக வசூல் வேட்டையும் நடந்து கொண்டிருந்தது.

கொஞ்சம் பதட்டத்துடன் பின்புறம் சென்ற போது அங்கு 'தேனுபுரீஸ்வரர் சன்னதிக்கு செல்லும் வழி' என்ற போர்டை பார்த்தவுடன் கொஞ்சம் ஆசுவாச படுத்திக் கொள்ள முடிந்தது.

இவை எது பற்றியும் கவலையுறாமல் ஏகாந்த இனிமையில் தேனுபுரீஸ்வரர்,
ஞானாம்பிகை அம்மனுடன் அருள் பாலித்து வருகிறார். இன்னும் சில நாட்களில் முழுதும் ஒரு துர்க்கை கோயிலாக இது மாற்றப் பட்டாலும் ஆச்சர்யம் இல்லை.

பெரும்பாலான ஆலயங்களை போலவே இதுவும் செய்யப்பட்ட நற்ப்பணிகளால் பாதிக்க பட்டு இருக்கிறது. தூண்கள் எல்லாம் வெள்ளை சிமெண்ட் பூசப்பட்டு அதில் இருக்கும் சிறு சிலைகள் எல்லாம் காணவில்லை. உள்ளே ஆலய பிரகாரத்தில் இருந்த நாயக்கர் கால ஓவியங்கள் எல்லாம் வெள்ளை அடிக்கப்பட்டு அழிக்க பட்டுவிட்டன. ஒரு சிறு பாகம் மட்டும் இன்னமும் இருக்கிறது. எதற்கு என்று தெரியவில்லை.


துர்க்கை சன்னதிக்கு வருபவரில் 10க்கு 3 பேர் இங்கு வருவது போல் தெரிகிறது. பெரிய பிரகாரங்கள் ஆள்கள் இன்றி வெறிச்சென காட்சி தருகின்றது. தென்னாடுடைய சிவனுக்கு ஒரு விளக்கு போடவும் ஆள் இல்லை.

பழையாறையில் இருந்து கொண்டு வரப்பட்ட சிலைகள் எங்கு என்று யாருக்கும் தெரியவில்லை. கோயில் மண்டபத்தில் பல்வேறுப்பட்ட சாமான்களும் போடப்பட்டு பூட்டி வைக்க பட்டுள்ளது. அதே மண்டபத்தில் மேற்கூரையில் அழகான ஓவியங்கள் (நாயக்கர் காலத்தவை போல் தெரிந்தது) அங்கு நூலாம்படை கட்டும் சிலந்திகளுக்கு மட்டுமாய் மங்கி கொண்டிருக்கின்றது. பூட்டிய கதவின் வெளியில் இருந்து எவ்வளவு பார்க்க முடியுமோ அவ்வளவு பார்த்து விட்டு வெளியேறினேன்.

பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை

பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைதான் அடுத்த இலக்கு. நான் எடுத்து வந்த வழி என்னை பட்டேச்ஸ்வரத்தை ஒரு சுற்று சுற்றி திரும்பவும் கோயிலுக்கே கொண்டு வந்து சேர்த்துவிட்டது. அப்போது தான் ரோட்டில் ஒருவர் பட்டீஸ்வரம் கோயில் அலுவலகத்தில் சென்று புலவர் என்று ஒருவரை பார்த்து கேக்க சொன்னார். புலவர் வழியை சொல்ல பட்டீஸ்வரத்தின் ஒரு ஓரத்தில் ஒண்டி சந்திற்குள் இருந்த பள்ளிபடையை
கண்டடைந்தோம்.

பள்ளிப்படை என்பது சோழர் காலத்தில் இறந்து போகும் ராஜ குடும்பத்தினர், பெரும் போரில் இறக்கும் வீரர்கள் ஆகியோரது அஸ்தியின் மேல் கோயில் எழுப்புவது. பொன்னியின் செல்வனில் வரும் 'எதிரியின்' பள்ளிபடையில் நடக்கும் சதி எல்லோருக்கும் தெரிந்ததே. இப்போது சோழர் கால பள்ளிபடைகள் கிட்டத்தட்ட இல்லை எனலாம். கொஞ்சம் நல்ல முறையில் இருப்பது இந்த பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை.


பஞ்சவன் மாதேவி என்பவள் ராஜ ராஜ சோழனின் ஐந்தாவது மனைவி. பள்ளிப்படை எழுப்ப பட்டிருப்பதை வைத்து அவள் ராஜ ராஜனின் பிடித்தமான மனைவி என்றும் தெரிந்து கொள்ளலாம். அவளது அஸ்தியின் மேல் ஒரு லிங்கம் அமைக்க பெற்று கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கும் ஒரு காப்பாளர் அருகிலேயே இருக்கிறார். இதன் அருகிலேயே குந்தவை நாச்சியாரின் பள்ளிப்படை இருந்ததாகவும், திருப்பணியின் பொது அதுவும், மடப்பள்ளி, மற்றும் இன்னொரு மண்டபமும் அகற்றப்பட்டு விட்டதாகவும் கூறினார்.




இந்த கோயிலின் ஒரு சுவற்றில் 'பஞ்சவன் மாதேவி'யை குறிப்பிட்டு ஒரு கல்வெட்டு இருக்கிறது. அதை தவிர்த்து இது பள்ளிபடையில் இருந்து ஒரு சிறு கோயிலாய் மாறிக்கொண்டிருகிறது.

அங்கிருந்து திருப்புள்ளமங்கை சென்ற போது மணி 12.30ஐ தாண்டிவிட்டது. கோயிலும் மூடப்பட்டுவிட்டது. சோழர் கால கோயில்களிலே பழமையானதான இந்த கோயிலை பார்க்க முடியாதது சற்று வருத்தமாக இருந்தாலும்,வெளியில் இருந்து பார்த்துவிட்டு இன்னோருமுறைக்காக ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் குடந்தை வந்து சேர்ந்தேன்.

பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - 1

சில்பியின் 'தென்னாட்டு செல்வங்கள்' கடந்த புத்தக  காட்சியில் வாங்கியது. சென்ற வாரம்தான் படிக்க/பார்க்க  ஆரம்பித்தேன். பார்க்க பார்க்க எல்லா இடங்கள் இல்லா விடினும் ஒரு சில இடங்கள் மட்டுமாவது போய் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. விடுமுறைக்கு வீட்டில் எல்லோரும் ஊருக்கு போய் விட உடனே தட்கலில் கும்பகோணத்திற்க்கு ரயில் ஏறினேன்.

கும்பகோணம் நிறைய  மாறி விட்டது. நிறைய மாறாமலும் இருக்கிறது. வட மாவட்டங்களில் நிலவும் பதற்றம் ஊரின் எல்லா இடங்களிலும் தெரிகிறது. நிறைய கடைகள் மூடி இருக்கிறது. பேருந்துகள் எல்லாம் 4-5ஆக போலீஸ்  பாதுகாப்புடன் செல்கின்றன. மாலை 6-7 மணிக்கெல்லாம் பேருந்துகள் நிறுத்த பட ஊருக்கு போக வழியில்லாமல் வழியில்லாமல் ஜனம் பேருந்து நிலையத்திலேயே படுத்து கிடக்கின்றனர்.

பழையாறை

சோழர்களின் பழைய தலை நகரான பழையாறை இப்போது 'கீழ பழையாறை'யாக, குடந்தையில் இருந்து 5-6 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. அதன் சோழ வரலாற்றின் ஒரே எச்சம் ஊரின்  ஓரத்தில்  இருக்கும் ' சோமேஸ்வரர்' கோயில்.

 

 பிற்கால சோழர்களின் தலை நகராக 'இஞ்சி சூழ் தஞ்சை' இருந்தாலும் சோழ மன்னர்கள் மற்றும் அவர்களது ராணிகளும் வாழ்ந்தது பழையாறையில் தான். அவர்களின் மாளிகைகளும் அந்த புரம்களும் இருந்தது. பிற்கால சோழர்கள் நசிந்து பாண்டியர்கள் தலை எடுத்த போது ஜடா வர்ம சுந்தர பாண்டியனால் இந்த நகரம் அழிக்க பட்டது. சுந்தர பாண்டியன் வெறுமனே அழிக்கவில்லை. எல்லா மாளிகைகளையும் தரை மட்டமாக்கி அந்த இடத்தில் எள்ளு விதைத்து உழுதான்.

பழைய பழையாறை இன்றைய  தாராசுரம், பட்டீஸ்வரம், நந்திபுர விண்ணகரம் மற்றும் ஆவூர் முதலிய ஊர்களை உள்ளடக்கியதாய் இருந்திருக்கலாம். அதன் கீழ பாகத்தில்தான் 'கீழ பழையாறை' இருக்கிறது.

இன்றைய பழையாறை அந்த நாட்களின் சிறு நிழல் கூட இல்லாமல் தமிழகத்தின் இன்னொரு கிராமமாக இருக்கிறது. சில்பியின் ஓவியத்தில் கற்குவியலாய் இருக்கும் பிரகாரம் இப்போது சுற்றுச் சுவருடன் இருக்கிறது. யாரும் வருவது இல்லையால் கோயில் பூட்டியே கிடக்கிறது. அங்கு சென்று ஒரு குரல் கொடுத்தால் ஒரு கோயில் காப்பாளர் வருகிறார்.


கோயில் முன் கோபுரம் விழுந்து மொட்டை கோபுரமாய் நிற்கிறது. விமானம் இப்போது கொஞ்சம் பூசப்பட்டு விழாது நிற்கிறது. கோயில் பிரகாரம் முழுதும் கோயில் இடிபாடுகள் கொட்டி கிடக்கிறது. 'சோமேஸ்வரர்' மட்டுமே எல்லா வரலாற்றுக்கும் மௌன சாட்சியாய் இருக்கிறார்.

பழைய கோயிலின் கருங்கல் மீது சிமெண்ட்  பூசி பெரும்பாலான கல்வெட்டுகள் மறைந்து  விட்டன. பிரகார சுவரும் ஒரு இடத்தில் விழுந்து விட்டது. அரசு இந்த கோயில் புனரமைப்புக்கு ஒரு கோடி ஒதுக்கி இருக்கிறது என்று காப்பாளர் சொன்ன போது சந்தோசமாக இருந்தது (அன்று மாலை இன்னொரு புனரமைப்பை பார்ப்பது வரை மட்டுமே!)

இன்னமும் இங்கு சுற்றி உள்ள வயல்களில் உழும் போது உடைந்த பானைகள், கற்கள் கிடைப்பதாகவும் சொன்னார். ஒரு வயலோரம் காட்டி அங்கு ஒரு மாளிகை இருந்ததாகவும் சொன்னார். இங்கிருந்த சிலைகள் பலவும் பட்டீஸ்வரம் 'தேனுபுரீஸ்வரர்' கோயிலில் இருப்பதாய் சொன்னார்.

இன்றைய பழையாறை எல்லா romantic notionsஐயும் தகர்த்துவிட பழைய பழையாறையின் இன்னொரு  பாகமான 'நந்திபுரம் விண்ணகர'த்தையும் (என்ன ஒரு அழகான பெயர்)  பார்த்து விட்டு அடுத்து பட்டீஸ்வரம் கிளம்பினேன். 

முற்றம்

கல்லூரி கை எழுத்து பத்திரிக்கையின் பிரதி. நினைவில் பதிந்து கொள்ள வசதியாக. 

அஞ்ஞாடி - 2

நான் சிறு வயதில் சிவகாசி செல்லும் போது  மின்சாரம் என்பது எப்பவாவது வரும் ஒரு வஸ்து. பெரும்பாலான நாட்கள் விளையாட்டிலும், சினிமா தியேடர்களிலும் செல்லும். இருட்டில் வீட்டில் இருக்கும் என்றாவது ஒரு நாளில் எங்கள் மாம்மை எதாவது பழைய கதை சொல்லுவர். ஒரு முறை கள்ளர்கள் திரண்டு வந்து சிவகாசியை கொள்ளை அடித்த கதை சொல்லி இருக்கிறார். எங்களை இருட்டில் தெருவில் விளையாட விடாமல் செய்வதற்காக சொன்ன கதையாகவே அதை நினைத்திருந்தேன். அவர் கதையில் நாள் பூராவும் நடந்த கொள்ளையில் பலரும் கொல்லப்பட்டதும் பல வீடுகள் கொள்ளை அடிக்க பட்டதும், இரவில் தீப்பந்தங்களோடு கொள்ளை நடந்ததும் கேக்க கொஞ்சம் பயமாகவே இருக்கும்.

நாடார்கள் திருமணத்தின் போது பல்லக்கில் செல்லும் உரிமைக்காக ஆரம்பிக்கும் போராட்டம், அவர்களின் பொருளாதார நிலையின் மீதான தாக்குதலாய் மாறுகிறது. status quo வை நிலைநிறுத்த வரும் ஆங்கில அதிகாரிகள் அந்த பகுதியின் சாதி பின்னணிகளை அறியாமல் போலிசின் உதவியுடன் அடக்கவே முயல்கிறார்கள். இதில் ஆங்கில பாதிரிகளின் குறுக்கீடுகள் வேறு.

சிவகாசி சிவன் கோவிலின் உள் நுழையும் போராட்டம் இதே காலகட்டத்தில் நடக்கிறது. தாங்கள் அதிகமாய் இருக்கும் ஒரு ஊரில் உள்ள கோவிலில் நுழைய முடியாதது நாடார்களுக்கு சாதிய கீழ்மையுடன் தங்கள் பண பலத்தின் வீச்சையும் மட்டு படுத்துவதாய் இருக்கிறது. பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஒரு பிராமணரை அர்ச்சகராய் கொண்டு வருவது, பூணூல் அணிவது, சத்ரிய குல நாடார்கள் என்று தங்களுக்கு ஒரு சரித்திரத்தை கொண்டு வருவது என சமூகத்தில் மேல் எழும்பும் ஒவ்வொரு சாதியும் கட்டி எழுப்பும் பிம்பங்களை ஆரம்பித்து வைக்கிறார்கள் (Sanskritization).

50-60 வருடங்களாய் உயர்ந்த சாதி உரிமைகளை விடாது கேட்டு வந்த நாடர்களின் பொருளாதார முதுகெலும்பை உடைப்பது என்பது 1800களின் இறுதியில் நடக்கும் சிறு சிறு கிராம கொள்ளைகளில் ஆரம்பிக்கிறது. சிறு கடைகள், வீடுகள் புகுந்து கொள்ளை அடிப்பது என்று நடக்கும் கொள்ளைகளுக்கு ஆங்கில அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இந்த கொள்ளைகளே நாடர்கள் அதிகம் வசிக்கும், அவர்களின் செல்வ நிலை உயர்ந்து இருக்கும் சிவகாசியை கொள்ளை அடிக்க யோசிக்க வைக்கிறது.

சிவன்  கோவில் நுழைவின் பிரச்சினையில், பதட்டத்தில் இருக்கும் நாடார்கள் சிவகாசியை கொள்ளை இட்டுவிட்டால் அதன் பின் தங்கள் சாதிய நிலை இன்னமும் கீழே போய்விடும் என்று சிவகாசியை காப்பாற்ற தயார் ஆகிறார்கள். செண்பக குட்டி, அய்ய நாடார் போன்றோர் தலைமையில் ஜூன் 6,1899ம் தேதி நடக்க போகும் கொள்ளையை தடுக்க கூடுகிறார்கள்.

சிவகாசி கொள்ளை, எழும் அலையின் உச்சியாய் விழுந்தது. அதன் பின் இருந்த எதிர்ப்புகள் எல்லாம் நீர்த்து போன அளவிலேயே இருந்தது. பெரும் எதிர்ப்பாய் இருந்த மறவர்களும், குற்ற பரம்பரை சட்டம் மற்றும் காவல் பணிகளின் பொறுப்பு ஆங்கில போலீசுக்கு போனதும், அவர்களை தரையில் அழுத்தியது.

1900களில் ஆரம்பித்த விடுதலை போராட்டமும் 1920களில் நடந்த கோவில் நுழைவு போராட்டங்களும் பெரிய எதிர்ப்புகளை காணாது சிவகாசியில் நடந்து முடிகிறது. இதற்க்கு பிறகும் பயணிக்கும் கதை வெகு விரைவில் 1980களுக்கு வந்து முடிகிறது.

கிராமங்களின் சாதிய வேறுபாடுகள், உயரும் பொருளாதார நிலை கொண்டு வரும் மாற்றங்கள், அதன் பொருட்டு மாறும் மனிதர்கள் என்று பூமணியின் கதை செல்கிறது.  

வர்க்க வேறுபாடுகளின் கதையாகவும், பொருள்லாதார மாற்றம் எப்படி சாதிய கட்டமைப்பை மாற்றி போடுகிறது என்பதின் கதையாகவும் விரியும் கதை, சில இடங்களில் வெறும் வரலாற்றின் வர்ணனைகளாய் போய் விடுகிறது. சற்று அலுப்பை கூட்டும் விதமாய் இருக்கிறது இது.

அது போலவே வரலாற்றின் விமர்சனங்கள் எதுவும் இல்லது வைக்க படும் கதை வரலாற்று மனிதர்களின் முன்/பின் நிலைகள் இல்லாது  நிகழ்வுகளின் விளைவுகள் சொல்லப்படாமல் போகிறது. உதாரணமாக ராக்லாந்து  பாதிரியின் செயல்கள் என்ன மாதிரியான எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது என்பது இல்லை. 1000 பக்ககங்கள் விரியும் கதையில் எல்லாவற்றையும் விவரிக்க முடியாதுதான்.

புத்தகத்தின் ஆரம்பத்தில் ஒரு family tree இருந்திருந்தால் கொஞ்சம் உதவியாக இருந்திருக்கும். ஆனால் இந்த மாதிரியான வீச்சு கொண்ட ஒரு கதை தமிழில் எழுதபடுவது அவசியமாகவே தெரிகிறது. இப்பொழுது படித்து கொண்டிருக்கும் 'ஆழி சூழ் உலகு'ம்  இது போன்றே ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

வரலாற்று புனைவுகள் படிக்கும் ஆர்வமும், (கொஞ்சம் பொறுமையும்) இருந்தால் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.


நாவல் - அஞ்ஞாடி

பதிப்பாளர் - க்ரியா

விலை - 925 ரூ

அஞ்ஞாடி - 1

படித்து முடித்து ஒரு மாதம் ஆகிறது. 'அஞ்ஞாடி'இன் கதைகள் இன்னமும் முழுமையாக உள் வாங்க படவில்லை. சென்ற வருடமே வந்து இருந்தாலும் 'அஞ்ஞாடி' சிவகாசி கொள்ளை பற்றி பேசுவது மட்டுமே இந்த வருடம் வாங்குவதற்கு உந்துதலாக இருந்தது. 

25 வருடங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறைகள் எல்லாம் சிவகாசி வடக்கு ரத வீதியில் இருந்த என் மாம்பா (அம்மாவின் அப்பா) வீட்டில்தான் கழியும். பகல்கள் எல்லாம் பட்டாசு கட்டு ஒட்டவும், சில சமயம் தீப்பட்டித் தாள் ஓட்டுவதிலும் ஓடும். பகல் காட்சி 'ஒலிம்பிக்' சினிமாவிலும், 'பழனியாண்டவர்' பெஞ்சுகளிலும் சிவாஜி, எம்.ஜி.யார் படங்கள் பார்ப்பதும், தேர் இழுப்பது, பத்ர காளி அம்மன் கோவிலுக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வேப்பிலை கட்டி போவதும், கோவிலில் குவிந்து கிடக்கும் வேப்பிலையில் உருண்டு விளையாடுவதுமாக விடுமுறை கழியும்.

நெருக்கமான வீடுகள், ஒரு பக்கம் பாட்டி வீடும் (அம்மாவின் பாட்டி) இன்னொரு பக்கம் சின்ன மாம்பா (அம்மாவின் சித்தப்பா) வீடுமாக தெருவின் ஒரு கடைசியில் ஒரு பெரிய குப்பை கொட்டும் இடம்.
அதற்கு அப்புறம் இருக்கும் புல் மார்கெட்டின் குப்பைகள் எல்லாம் இங்கேதான் கொட்டப்படும். மூக்கை பிடித்துக் கொண்டு குப்பை மேட்டை கடந்து புல் மார்கெட்டின் உள்ளே நுழைந்து குவிந்து கிடக்கும் வாழை பழங்களையும், பலாப்பழங்களையும் கடந்தால் சிவன் கோவிலின் சிவன் சன்னதி தெரு வீதியை அடையலாம்.

அஞ்ஞாடியின் கதை ஆண்டி குடும்பனின் சிறு வயதில் ஆரம்பிக்கிறது. அவனுக்கும் வண்ணான் மாரிக்கும் இருந்த நட்பின் கதைகளில் ஆரம்பிக்கும் கதை அவர்களின் கல்யாணம், குழந்தைகள் ஊர் நடப்புகள், கிளைக் கதைகள் என விரிந்துக் கொண்டே செல்கிறது.

கிளைக் கதைகள், வரலாற்று புனைவுகள், அதன் விளைவுகள் என தட தடவென செல்லும் கதை ஒரு விதத்தில் நம் கிராமங்களின் சாதி கட்டுமானங்களின், 1800களில் புதிதாய் உள்ளே நுழைந்த மதங்களின் கதையாகவும் விரிகிறது.

வெவ்வேறு மனிதர்கள். பஞ்சம் பிழைப்பவர்கள், ஊரை அண்டி வாழும் வண்ணார்கள், சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறைகள் என்று செல்லும் கதை, மூன்று முக்கிய புள்ளிகளில் குவிகிறது.

1870களில் தமிழகத்தில் வந்த தாது வருட பஞ்சம், தென் தமிழகத்தில் நிகழ்ந்த மத மாற்றங்கள், சிவகாசி கொள்ளை. கதை மனிதர்கள் எல்லாம் இந்த மூன்று நிகழ்வுகளிலும் பங்கெடுக்கிறார்கள் மற்றும் பாதிக்க படுகிறார்கள். அவர்கள் வாழ்கை இந்த நிகழ்வுகளுக்கு முன்னும் பின்னுமாய் மாறுகிறது.

தாது வருட பஞ்சம் என்பது கேள்வி பட்டிருந்தாலும், பூமணியின் விவரிப்புகள் மனதை பிசைகிறது. விதை நெல்லையும் சமைக்கும் சம்சாரியில் இருந்து கஞ்சி தொட்டிக்கு போகும் சிறுவர்கள், பசியில் கொத்து கொத்தாய் மரணிப்பவர்கள். பிள்ளையை புதைத்து வந்த நேரத்தில் மனைவியும் இறப்பது, ஒவ்வொருவருக்காக குழி வெட்டாமல் ஒரு நாளைக்கு ஒரு குழி என்று வெட்ட ஆரம்பிப்பது என்று ஒவ்வொரு நிகழ்வும் மனதில் பாரத்தை ஏற்றுகிறது.

தாது வருஷ பஞ்சம் அது வரை தென் கிராமங்களில்  சாதி முறையை மாற்றுகிறது. வெள்ளாமை செய்து வந்த குடும்பர்களும் அவர்களுக்கு காவல் முறை செய்து வந்த தேவர்களும் கஷ்ட நிலைக்கு தள்ளப்பட அதுவரை ஊர் பனைஏறிகளாய் இருந்த நாடார்கள் பண புழக்கத்தில் முன் வருகிறார்கள். பேட்டைகளும், மளிகை கடைகளும் ஊர்களுக்குள் பெருகுகின்றது. ஊர் சாதிகளுக்கும் இருந்த பழக்கங்களும் முறைகளும் மெதுவாய் மாற்றம் பெறுகின்றது.

இதே காலகட்டத்தில் (1820-80களில்)நெல்லையை தலைமை இடமாக கொண்ட பங்கின் மூலமாக சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சத்திரப்பட்டி, கழுகுமலை போன்ற ஊர்களில் தீவிரமாக கிறித்துவ மதத்தை பரப்ப பாதிரியார்கள் வருகிறார்கள். அவர்களுடன் பள்ளிகூடங்களும், சாதி ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலைக்கான நம்பிக்கையும் வருகிறது. இவர்களின் கதையும் ஊடாடி வருகிறது. ராக்லாந்து பாதிரி கிறித்துவத்தை பரப்ப இந்த பகுதி கிராமங்களை எல்லாம் சுற்றி வருகிறார்.

மதம் மாறியவர்கள் எல்லாம் அது வரை இருந்த சாதிய கட்டுபாடுகளுக்கு அடி பணிய மறுக்கும் போது புதிய பிரச்சினைகள் எழும்புகிறது. அதுவரை இருந்த பொருளாதார நிலை மாறும் போது, நாடார்கள் பண முதலாளிகலாய் மாறும் போது, அது வரை சாதிய பிரச்சினையாய் இருந்தது இப்போது கௌரவ பிரச்சினையாகவும் மாறுகிறது.

மதம் மாறிய கிறித்தவ நாடார்கள் சாதிய கட்டுபாடுகளை மீறவும், இந்து நாடார்கள் தங்கள் பொருளாதார மேம்பாடு சாதிய தாழ்ச்சியை ஒழித்து கட்டியதாய் கோவில்களில் நுழையும் உரிமைக்கு போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். அது வரை இருந்து வந்த கட்டு முறைகளை மீற முயலும் இந்த முயற்ச்சிகள் கடுமையான எதிர்ப்பை சந்திக்கின்றன.

எட்டயபுரம் ஜமீனில் உள்ள கழுகு மலையில் பல்லக்கில் போகும் உரிமையை கேக்கும் நாடர்களால் இந்த மோதல் பெரிய கலவரமாய் வெடிக்கிறது. 1895இல் கழுகுமலை ரத வீதியில் கிருத்துவர்கள் போட்ட பந்தல் தேர் சுற்றி வர தடையாய் இருப்பதாக சொல்லி ஏற்படும் கலவரத்தில் 10 உயிர்கள் பலியாகின்றன. எட்டயபுரம் ஜமீனின் மேனேஜர்ரும் இந்த கலவரத்தில் செத்து போகிறார்.

Letter for Father - Vanathy

The Ship
I know the ship is
beautiful. I make this
ship with blocks. The name
of the ship is
safety and tower ship.

 

The Letter
Because look at the 
top of the ship it looks
like a tower and look at the
steps to the tower see the first
steps there are going to the
water. I want gift you look at
the phone for you. Because you tell it
is beautiful.

Vanathy
12/3/13

Nostalgic - 7 அம்மாவின் வீடு

சில மாதங்களுக்கு முன் அம்மாவின் சிவகாசி வீடு விற்கப்பட்டது. அன்று காலை அம்மா பத்திர பதிவுக்கு சென்று விட்டு வந்தார். சிவகாசியுடன் இருந்த கடைசி தொடர்பும் விட்டது.

எனக்கு  முதல் நினைவு அந்த வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. என் தம்பி பிறந்த பொழுது என் அம்மா அங்கே இருந்தார். எனக்கு ஒரு நான்கு வயது இருக்கும். இரவில் சரியாக தூங்காமல் இருப்பேன். அப்போது  என் மாம்பா (அம்மாவின் அப்பா) என்னை தூக்கி கொண்டு தெருமுக்கில் இருந்த குழாயடியில் உக்கார்ந்து இருப்பார். இரவின் நிசப்தம், ஆள் நடமாட்டம் இல்லாத தெற்கு ரத வீதி இன்றும் நினைவில் இருக்கிறது.

என் அம்மாவின் வீடு அந்த தெருவின் உள்ளே ஒரு சிறு சந்தில் இருந்தது. மொத்தம் ஒரு பத்து வீடுகள் இருக்கும். கடைசி வீட்டுக்கு முந்தைய வீடு என் அம்மாவின் வீடு. கடைசி வீடு அம்மாவின் சித்தப்பாவின் வீடு. என் அம்மாவின் பாட்டி வீடும் அதில்தான் இருந்தது. எல்லா விடுமுறைக்கும் அங்கு சென்று விடுவோம். நிறைய சந்தோஷமான நாட்கள். சில கஷ்டமான நாட்களின் நினைவுகளுடன் விற்கப்பட்டுவிட்டது.

25 வருடங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறைகள் எல்லாம் சிவகாசி தெற்கு ரத வீதியில் இருந்த என் மாம்பா (அம்மாவின் அப்பா) வீட்டில்தான் கழியும். பகல்கள் எல்லாம் பட்டாசு கட்டு ஒட்டவும், சில சமயம் தீப்பட்டித் தாள் ஓட்டுவதிலும் ஓடும். பகல் காட்சி 'ஒலிம்பிக்' சினிமாவிலும், 'பழனியாண்டவர்' பெஞ்சுகளிலும் சிவாஜி, எம்.ஜி.யார் படங்கள் பார்ப்பதும், தேர் இழுப்பது, பத்ர காளி அம்மன் கோவிலுக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வேப்பிலை கட்டி போவதும், கோவிலில் குவிந்து கிடக்கும் வேப்பிலையில் உருண்டு விளையாடுவதுமாக விடுமுறை கழியும்.
"ஆஹோய் அல்லாஹோய்
ஆத்தாத்தா பெரியாத்தா
அம்பது பிள்ளை பெத்தாத்தா
உனக்கு நாலு
எனக்கு நாலு போடாத்தா
ஆஹோய் அல்லாஹோய்
ஆத்தாத்தா பெரியாத்தா
கறியும் சோறும் போடாத்தா "
என்று பாட்டுப் பாட போவதற்கு முன் கரிக்கட்டையையும், சுண்ணாம்புவையும் உரசி மேலெங்கும் கரும் புள்ளி செம்புள்ளி குத்தியது அந்த வீட்டின் குளியலறையில்தான்.

பக்கத்து வீட்டு பரமேஸ்வரியக்காவின் பிள்ளைகளுடன் சிறு வயதில் இருந்து சிநேகிதம் கொண்டதும், இரவு பகலாய் தாயம், trade, பரமபதம் விளையாண்டதும் இந்த வீட்டில் இருந்த போதுதான். இரவு முழுவதும் விழித்து இருந்து சூரன் குத்து பார்த்தது, விழித்து இருப்பதற்காக விடிய விடிய தாயம் விளையாடுவது என்று பொழுது போகும்.

குமார் அண்ணாச்சியுடன் மாடியில் புரிந்தும் புரியாமலும் வானியலும், இந்து ஆன்மீகமுமாக ஒருவாறு கலந்து கட்டி எனது புத்தக தேடல்கள் ஆரம்பித்ததும் இங்கிருந்துதான்.

வீடு ஒரு பெரிய ஹாலும், மிகச் சிறிய சமையலறையும், இன்னொரு பெரிய குளியலறையும் மட்டுமே கொண்டது. வீட்டின் ஊடே படிக்கட்டுகள் வழியாக மாடியில் ஒரு பெரிய ஹால். சிறு மொட்டை மாடி, என்றுமே தண்ணி இல்லாத ஒரு சிறு தொட்டி, அந்த தொட்டியில் இருந்து பக்கத்துக்கு கழிப்பறைக்கு ஒரு குழாய்.

என் மாம்பா ஒரு பழைய காங்கிரஸ்காரர் ஆதலால் எப்போதும் கதர்தான் கட்டுவார். அதை வெளுப்பதற்கு ஒரு வண்ணான் வீடிற்கு வருவார். அந்த நாள் ஒரு ஓரத்தில் இருக்கும் அழுக்கு பெட்டி திறக்கப் படும். நானும் தம்பியும் குவிந்து கிடக்கும் ஆளுக்கு துணிகளில் விளையாடுவோம். 'சின்ன முதலாளி' என்று வண்ணான் கூப்பிடும்போது தலையில் கொஞ்சம் போதை ஏறி கிறுகிறுக்கும். தோட்டி சுந்தரம் குளியலறை வாசல் வழியாக வந்து சுத்தம் செய்துவிட்டு ஒரு அலுமினிய தூக்கில் என் மாம்மை தரும் பழைய சோற்றை வாங்கிக் கொண்டு போகும்.

சிவகாசி வீட்டில் ஒரு நாள் என்பது காலையில் என் மாம்பாவுடன் உடுப்பி ஹோட்டலுக்கு செல்லுவதில் தொடங்கும். தம்பி கேசரியும், நான் வேறு எதாவது பண்டமும் சாப்பிட்டுவிட்டு, அன்றைய செய்தி தாள்களை வாங்கிவிட்டு திரும்புவதில் ஆரம்பிக்கும். 'தினத்தந்தி' 'தினமலர்' என விற்பனையில் இருக்கும் அனைத்து செய்தி தாள்களும் வாங்குவார். வீட்டிற்க்கு வந்து காலை சாப்பாடு, குளியல் முடித்து விட்டால் பிறகு முழுவதும் ஆட்டம்தான். 10-11 மணி வாக்கில் மாம்பா வெள்ளை வேஷ்டி, வெள்ளை கதர் சட்டையுடன் வெளியே கிளம்புவார்.
கட்டு ஓட்டுவது, விளையாடுவது போன்று சில மணி நேரம் கழியும். மதிய சாப்பாடு. மாம்பா 2-3 மணி போல் வீடு திரும்புவார். சாப்பிட்டு, ஒரு மணி நேரம் தூங்குவார்.

திரும்பவும் 4 மணிவாக்கில் மாம்பா வெளியே கிளம்புவார். இந்த முறை நானும் என் தம்பியும் கூடவே கிளம்புவோம்.
புல் மார்கெட் வழியே நடந்து சிவன் கோயில் எதிரே இருந்த மூப்பனார் கடையில் ஒரு லைம் சோடா. அங்கிருந்து அப்படியே நடந்து பெரிய தேரடியில் இருக்கும் வேலாயுத நாடார் கடைக்கு பக்கத்தில் இருக்கும் 'பாண்டியன் ஐஸ் லேன்ட்'ல் ஒரு ஜூஸ்.
அப்புறம் வேலாயுத நாடார் கடையில் கொஞ்சம் தின்பண்டம். அங்கே இருக்கும் புத்தக கடையில் அன்று வந்து இருக்கும் எல்லா புத்தகங்களும் வாங்குவார். நானும் எதாவது காமிக்ஸ் புத்தகங்கள் வாங்குவேன். அங்கிருந்து நானும் தம்பியும் வீடு திரும்பி விடுவோம். நீண்ட நாட்கள் என் மாம்பா என்ன வேலை செய்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது.

சாயங்கால வேளைகளில் பல நாட்கள் மின்சாரம் இருக்காது. வீட்டு வாசலில் ஒரு அரிக்கேன் விளக்குடன் உக்கார்ந்து பல கதைகள் பேசிக் கொண்டிருப்போம். இருட்டிலேயே சாப்பிட்டு விட்டு பல நாட்கள் தூங்கிவிடுவோம்.
அந்த வீட்டின் மாடியில் இருக்கும் ஹாலில் நானும் தம்பியும் பல நாட்கள் ஒரு கயிறைக் கட்டி டென்னிஸ் விளையாடி இருக்கிறோம். அங்கே கட்டி வைக்க பட்டிருக்கும் சாக்கு பைகளில் இருக்கும் பல மாத புத்தகங்களில் சுஜாதாவையும், கல்கியையும் வாசித்துப் பழகி இருக்கிறேன்.
அங்கே இருந்த ஒரு அலமாரியில் என் அம்மா B.A படித்ததின் எச்சமாய் கிடைத்த புத்தகங்களில்தான் எலியட்டும், அந்தோணி ஹோப்உம், டுமாஸ்சும் அறிமுகமானார்கள். அங்கிருந்த மணியனின் 'அமெரிக்க பயண நினைவுகள்'தான் மதுரையை தாண்டியும் ஒரு உலகம் உள்ளது என்று காட்டியது.

அம்மாவின் தாத்தாவின் திதியில் வீடியோ டெக் எடுத்து விடிய விடிய படம் பார்ப்பது. வீடு நிறைய அம்மாவின் அத்தைகளும், சித்திகளும், மாமாக்களும் அவர்களின் பிள்ளைகளுமாய் நிரம்பி வழியும் நாட்கள். மனோன்மணி அக்காவின் (என் அம்மாவின் அத்தை) உரத்த சிரிப்பும், இடைவிடாத நக்கலும், அம்மாவின் பதில்களுமாய் ஒரு சந்தோசமான உலகமாய் இருந்தது.

பழனி சென்ற போது மாரடைத்து என் மாம்பா இறந்து வந்த பொழுது அந்த வீட்டின் சந்தோசங்கள் எல்லாம் வடிந்தது. வீட்டின் நடுவே பிணமாய் பார்த்த அன்று வாழ்க்கையில் என்னை விழாது பிடிப்பார் என்று நினைத்திருந்தவர் போன துக்கம் தொண்டையில் நின்றது.

அந்த 12ம் வகுப்பு விடுமுறையும் அங்கேதான் கழிந்தது. கொஞ்சமும் சந்தோஷமில்லாத, என் மாம்மையின் தனிமையை மட்டுமே பார்த்த நாட்கள். அதன் பின் மாடி மட்டும் வாடகைக்கு விடப்பட்டு அந்த வீடு துண்டுகளாய் சிதைந்து போனது. 6 வருடங்களுக்கு முன் மாம்மையும் இறந்த பிறகு, மாமாவின் பிள்ளைகளுக்காய் விற்கப் பட்டு நினைவுகள் மட்டுமே மிச்சமாய், அந்த வீட்டின் உடனான கடைசி சரடும் விட்டுப் போனது.

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...